ஆன்மிகம்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ராமநவமி உற்சவம்

திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீராமன், சீதா உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.

கடலூரை அடுத்த திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் ராமநவமி உற்சவம் 9 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான ராமநவமி உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கியது.

இதையொட்டி ஸ்ரீராமன், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகிய சாமிகளுக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஸ்ரீராமன், சீதா உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உற்சவத்தில் சிகர நிகழ்ச்சியான இன்று (செவ்வாய்க்கிழமை) ஸ்ரீராமன், சீதா, லட்சுமணன், அனுமன் ஆகிய சாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சாற்றுமுறை நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் வீதிஉலா நடைபெறுகிறது. இந்த வீதிஉலா ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த உற்சவத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.