ஸ்ரீராகவேந்திரர் 
ஆன்மிகம்

சேலையூர் ஸ்ரீராகவேந்திர சுவாமி மந்த்ராலய கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

தாம்பரம் அடுத்த சேலையூர், மகாதேவன் நகரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த ராகவேந்திர சுவாமி மந்த்ராலயத்திற்கு நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது.

மாலை மலர்

தாம்பரம் அடுத்த சேலையூர், மகாதேவன் நகரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ராகவேந்திர சுவாமி மந்த்ராலயம் கட்டப்பட்டு வந்தது. அது நிறைவு பெற்றுள்ள நிலையில், அதன் கும்பாபிஷேகம் மற்றும் மூல மிர்த்திகா பிருந்தாவன பிரதிஷ்டை நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

கும்பாபிஷேகத்தை நஞ்சங்கூடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தின் பீடாதிபதி, ஸ்ரீ சுப தீர்ந்திர தீர்த்த சுவாமிகள் நடத்தி வைக்கிறார். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று மாலை யாகசாலை வளர்க்கப்பட்டது. இரண்டாம் நாளான இன்று காலை 6 மணிக்கு, ஹோமம் நடைபெற்றது.

மாலை, மங்கள இசை மற்றும் கலைநிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு சுவாமிகள், அருளுரை மற்றும் அன்னதானம் நடக்கிறது. கும்பாபிஷேக நாளான நாளை காலை பூர்னா ஹுதி, யாத்ரா தானம், கடம்புறப்பாடு நடக்கிறது. காலை 10 மணிக்கு கலசங்களுக்கு கும்பநீர் சேர்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, புதிய மடத்தின் ஸ்தாபகர் முன்னாள் தாம்பரம் நகரமன்ற தலைவர் கரிகாலன் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.