புதுவை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் பதவி ஏற்பு விழா நடந்தது. அமைச்சராக பதவி ஏற்ற தேனீ.ஜெயக் குமார் தனது அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்போது திருக்காஞ்சியில் புஷ்கரணி விழா நடத்துவது தொடர்பான கோப்பில் அவர் முதல் கையெழுத்திட்டார். அதாவது மங்கலம் தொகுதி திருக்காஞ்சி ஸ்ரீகங்கைவராக நதீஸ்வரர் கோவில் சங்கராபரணி ஆற்றங்கரையில் மகா புஷ்கரணி விழா நடத்துவதற்கான கட்டமைப்பு பணிகளை தொடங்க முதல்-அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் முதல் கையெழுத்திட்டு இருந்தார்.
அதற்கான பணிகளை தற்போது தொடங்கி 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நேற்று மாலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கோவில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது புஷ்கரணி விழா தொடர்பாக குழுக்கள் அமைத்து உடனடியாக பணிகளை தொடங்குமாறு நிர்வாகிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
திருக்காஞ்சியில் புஷ்கரணி விழா நடத்துவது தொடர்பான அமைச்சர் தேனீ.ஜெயக்குமாரின் நடவடிக்கைக்கு திருக்காஞ்சி கோவில் முன்னாள் திருப்பணி குழு தலைவர் செல்வம், தனி அதிகாரி சீதாராமன், கோவில் குருக்கள் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் அப்பாவு, நடராஜன், மோகன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.