தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த 88 கோவில்களுள் ஒன்றாகும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆவணி திருவிழா இக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு ஆவணி திருவிழா கடந்த மாதம் 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், 14-ந் தேதி முத்துப்பல்லக்கு விடையாற்றி விழாவும் நடந்தது.
ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், கடைசி ஞாயிற்றுக்கிழமையான நாளை மாலை 3 மணிக்கு நடக்கிறது. அதனைத்தொடர்ந்து 18-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) காலை கொடியிறக்கும் நிகழ்ச்சியும், 23-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழாவும், 25-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) தெப்ப விடையாற்றி விழாவும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் பரணிதரன், கண்காணிப்பாளர்கள் சுரேஷ், மாதவன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.