ஆன்மிகம்

கஷ்டங்களை நீக்கும் பஞ்சமுக விநாயகர்

விநாயகர் வழிபாட்டிற்கு எளிய தெய்வமாக ஒவ்வொரு தெருமுனைகளிலும் மக்களின் கஷ்டங்களையும், துயரங்களையும் நீக்கி வேண்டும் வரம் தந்து அருள்புரிகிறார்.

நாம் வணங்கும் விநாயகர்கள் பெரும்பாலும் ஒற்றை தலையுடன் தான் பார்த்து இருப்போம். ஆனால் சில ஆலயங்களில் ஐந்து முகத்துடன் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர் அருள்பாலிக்கிறார். ஒரு முகத்துடன் உள்ளபோதே எல்லா வினைகளையும் களைபவர் ஐந்து முகத்துடன் இருக்கும்போது பல மடங்கு அருள்மழை பொழிவார்.

ஹேரம்ப கணபதி எனும் பஞ்சமுக விநாயகர்:-

ஹேரம்ப கணபதி என்பது விநாயகரின் 32 வடிவங்களில் 11 வது திருவுருவம் ஆகும். ஐந்து முகங்களை கொண்ட விநாயகர் திருவுருவம் நமது நாட்டை விட அண்டை நாடான நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. தாந்திரிய வழிபாட்டுக்கு ஏற்ற திருவுருவமாக ஹேரம்ப கணபதி விளங்குகிறார்.

ஹேரம்ப என்ற சமஸ்கிருத சொல்லிற்கு அர்த்தம் “உதவியற்றவர்களை பாதுகாப்பவர்” என்று பொருள். முத்தல புராணம், பிரம்ம வை வர்த்த புராணம், பத்ம புராணம், சிந்தியாகமம் மற்றும் கணேச புராணத்தில் ஹேரம்ப கணபதி என்ற பெயர் இடம் பெற்றுள்ளது. பசுமை கலந்த கருமை நிறத்துடன் ஐந்து முகத்துடன் காணப்படுவார். அபயம், விரதம், பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் என பத்து கரங்களில் தாங்கி சிம்ம வாகனத்தில் அமர்ந்து இருப்பதே இவர் திருவுருவம். ஆயினும் இவ்வுருவ அமைப்பு ஆலயங்கள் தோறும் சற்று மாறுபடுகின்றன.

கஷ்டங்களை நீக்கும் ஹேரம்ப கணபதி:-

பொருளாதார நிலையில் ஏற்படும் மந்தநிலை, கடன் பெற்று அதனை அடைக்க முடியாமல் ஏற்படும் துயரம் போன்ற கஷ்டங்களை நீக்க பஞ்சமுக விநாயகரை வழிபடலாம்.

மேலும் ஏகாதசி திதியில் விவசாயம், வேளாண்மை, காவல்துறை, விஞ்ஞானம், பொறியியல், வரி துறைகளில் வேலைபுரிவோர் வணங்கிட சகல நன்மையும் பெறுவர். ஹேரம்ப விநாயகர் எனும் பஞ்சமுக விநாயகர் ஆலயங்கள் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளது. அவற்றில் சிலவற்றை காண்போம்.

பஞ்சமுக விநாயகர் ஆலயங்கள்:-

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திலுள்ள குரு தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் பஞ்ச முகங்களுடன் சிங்கத்தில் அமர்ந்துள்ள பஞ்சமுக விநாயகரை குறிப்பிடலாம். ஒரே வரிசையில் ஐந்து தலையுடன் உள்ளார்.

நாகை காயா ரோகனேஸ்வரர் திருக்கோவிலில் பஞ்சமுக விநாயகரை வழிபடலாம். மேலும் இவ்வாலயத்தில் நாகங்களை ஆபரணமாக அணிந்துள்ள நாகாபரண விநாயகரை வழிபாடு செய்யலாம். நான்கு திசையில் தலையும், அதற்கு மேல் ஒரு தலையுமாக காட்சி தருகிறார்.