இந்து சமயத்தில் உள்ள அனைத்து "கடவுள்களுக்கும், அவர்களுக்கேற்ற ஆலயங்களும், வழிபாட்டு முறைகளும் உள்ளன. ஆனால், எல்லா இடங்களிலும் மிகவும் எளிமையாக இருந்து அருள்பாலிப்பவர், விநாயகப் பெருமான் கோவில்கள் மட்டுமின்றி, ஆற்றங்கரை, குளத்தங்கரை, அரச மரத்தடி, சாலையோரம் என எந்த இடத்திலும் விநாயகர் வீற்றிருப்பார்.
விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் அருளை பெறுவதற்குரிய நாளாகும். இந்நாளில் விநாயகப் பெருமானின் புகழ்பெற்ற, சிறப்பு மிக்க தலங்களுக்கு சென்று வழிபட்டால் விநாயகரின் பரிபூரண அருளை பெற முடியும். அத்தகைய சிறப்புமிக்க தலங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ராஜ கணபதி ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மூலவரான ராஜ கணபதி அரச மரத்தின் அடியில் கிழக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். இவரது வலது பக்கத்தில் சிவபெருமானும், இடது பக்கத்தில் கிருஷ்ணரும் எழுந்தருளி இருப்பது சிறப்பாகும். சிவபெருமான் 'நாகலிங்கேஸ்வரர்' என்றும், கிருஷ்ணர் 'சந்தான கோபாலகிருஷ்ணர்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். குழந்தை வரம் வேண்டி ஏராளமான தம்பதிகள் இத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே படித்துறை விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர், ஜடாமுடியுடன் வித்தியாசமான தோற்றத்தில் காட்சி தருகிறார். இவரது சிலையானது, கோவில் தெப்பக்குளம் தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்கு வந்து விநாயகரை வழிபட்டு செல்கிறார்கள். இக்கோவில், மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோவிலுக்கு முன்பே கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.