பழனி முருகன் கோவிலுக்கு பறவைக்காவடியில் வந்த சேலம் பக்தர்கள். 
ஆன்மிகம்

பழனி முருகன் கோவிலுக்கு பறவைக்காவடி எடுத்த பக்தர்கள்

பழனி முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், கொடுமுடியில் இருந்து தீர்த்தக் காவடி எடுத்து பாதயாத்திரையாகவும் வந்தனர்.

மாலை மலர்

பழனி முருகன் கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும், கொடுமுடியில் இருந்து தீர்த்தக் காவடி எடுத்து பாதயாத்திரையாகவும் வந்தனர். பங்குனி உத்திர திருவிழா முடிந்த பிறகும் ஏராளமான பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

அதன்படி சேலத்தை சேர்ந்த பக்தர்கள் 50-க்கும் மேற்பட்டோர், பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நேற்று வந்தனர். முன்னதாக அந்த குழுவை சேர்ந்த பக்தர்கள் 5 பேர் பறவைக்காவடியில் பழனிக்கு வந்தனர். இதற்காக ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடி எடுத்து, திருஆவினன்குடி மற்றும் கிரி வீதிகள் வழியாக வந்து பழனி முருகன் கோவிலை அடைந்தனர்.

ராட்சத கிரேன் மூலம் பறவைக்காவடியில் வந்த பக்தர்களை பொதுமக்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்து அந்த குழுவை சேர்ந்தவர்கள் கூறுகையில், கடந்த 35 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வருகிறோம். அலகு குத்தியும், பறவைக்காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகிறோம் என்றனர்.