ஆன்மிகம்

பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

களம்பூரான்கோட்டை பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

கணியம்பாடி ஒன்றியம் மோட்டுப்பாளையம் ஊராட்சியை சேர்ந்த களம்பூரான்கோட்டை கிராமத்தில் புதிதாக கட்டுப்பட்டுள்ள பச்சையம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி 12-ந்தேதி கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கோ பூஜை, தன பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, முதல் கால யாக பூஜைகள் நடந்தன.

அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 2-ம் கால யாக பூஜை, காலை 9.45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மேலும் வாமுனி, செம்முனி, அய்யனார் மற்றும் மூலவர் சிலைக்கு புனிதநீர் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் எம்.ராகவன், ஒன்றிய கவுன்சிலர் கே.ஜி.ஏழுமலை, ஊராட்சி தலைவர் மகேஸ்வரி வரதன், கொளத்தூர் ஊராட்சி தலைவர் என்.சரவணன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கும்பாபிஷேகத்தை படவேடு ரேணுகாம்பாள் கோவில் ஞானஸ்கந்தன் குருக்கள் மற்றும் குழுவினர் நடத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதனம் சி.சின்னசாமி, ஏ.சிகாமணி மற்றும் விழாக் குழுவினர் செய்து இருந்தனர்.