நெல்லையப்பர் கோவில் தெப்பத்திருவிழா 
ஆன்மிகம்

நெல்லையப்பர் கோவில் தெப்பத்திருவிழா

நெல்லையப்பர் கோவிலில் தெப்பத்திருவிழா நேற்று இரவு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

முன்னொரு காலத்தில் சைவ மதத்தினருக்கும், சமண மதத்தினருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சமண மதத்தினர், சைவசமயக் குரவர்களில் ஒருவரான அப்பர் பெருமானின் ஆழ்ந்த பக்தியினை பரிசோதனை செய்ய முடிவு செய்தனர்.

அவரை கல்லில் கட்டி கடலில் போட்டார்கள். அப்போது அப்பர் பெருமான் “கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே“ என்று சிவபெருமானை நினைத்து பாடினார்.

அப்போது கல்லானது தெப்பமாக மாறி கடலில் மிதந்தது. தெப்ப உற்சவம் மூலம் அப்பர் பெருமான் தனது பக்தியால் சிவன் அருளின் சிறப்பை உலகிற்கு உணர்த்தி, இறைவனின் திருக்காட்சி பெற்றார் என்ற தத்துவம் விளக்கப்படுகிறது.

அப்பர் பெருமான் வாழ்வில் நடந்த தெப்ப வரலாற்றுக்கிணங்க பாடல் பெற்ற சைவ சமய தலமாக நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது. நேற்று இரவு 7 மணி அளவில் அம்மன் சன்னதி அருகில் அமைந்துள்ள பொற்றாமரை குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் அப்பர் பெருமான் பவனி வரும் விழா நடந்தது. அவர்9 முறை தெப்பத்தை சுற்றி வந்தார்.

அதைத்தொடர்ந்து வரலாற்று தத்துவத்தில் உள்ள தெப்ப மண்டபத்தில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத்திலும் எழுந்தருளி அப்பர் பெருமானுக்கு திருக்காட்சி கொடுக்கும் வைபவ நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.