நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு கொடிமரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது எடுத்த படம் 
ஆன்மிகம்

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மாலை மலர்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடிமரம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. காலை 9 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதன் பின்னர் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

4-ம் திருநாளான வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு காந்திமதி அம்பாள் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு காந்திமதி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது.

10-ம் நாள் திருநாளான 26-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்பாளுக்கு முளைக்கட்டு திருவிழாவும், வளைகாப்பு வைபவமும் நடக்கிறது.

அப்போது காந்திமதி அம்பாளை அலங்கரித்து மடியில் முளைகட்டிய சிறுபயரை கட்டி வைத்து, வளைகாப்பு நடத்தி, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து சப்பரத்தில் அம்பாள் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்பாள் மடியில் கட்டி வைத்திருந்த முளைகட்டிய சிறுபயரை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.