நாகம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், பக்தர்கள் செடல் குத்திக்கொண்டதையும் படத்தில் காணலாம். 
ஆன்மிகம்

கடலூர் நாகம்மன் கோவிலில் செடல் திருவிழா

கடலூர் நாகம்மன் கோவிலில் செடல் திருவிழா நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ்நிலையம் அருகில் உள்ள நாகம்மன்கோவில் செடல் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. கடந்த 13-ந்தேதி நாகம்மனுக்கு சிறப்பு பூஜையும், அதனை தொடர்ந்து அனந்தசயனத்தில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நாகம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து செடல் அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் உடலில் பல்வேறு இடங்களில் செடல் குத்திக்கொண்டனர்.

மேலும் சிலர் மாவிளக்கு ஏற்றியும், நெய் தீபம் ஏற்றியும் நாகம்மனை வழிபட்டனர். காலை முதல் மாலை வரை பக்தர்கள் செடல் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்திய வண்ணம் இருந்தனர். அதன்பிறகு நாகம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நரசிம்மன் மேற்பார்வையில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் செய்திருந்தனர். இன்று (சனிக்கிழமை) மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.