ஆன்மிகம்

தூய சலேத் அன்னை ஆலய பெருவிழா: மின் அலங்கார தேர் பவனி இன்று நடக்கிறது

தூய சலேத் அன்னை ஆலய பெருவிழாவின் முக்கிய நாளான இன்று திருப்பலி மற்றும் மறை உரையினை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புச்சாமி வழங்குகிறார்.

கொடைக்கானலில் புகழ் பெற்ற தூய சலேத் அன்னை ஆலயம் உள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்ட இந்த ஆலயத்திற்கு ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்த ஆலயத்தின் 151-வது ஆண்டு பெருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினையொட்டி தினசரி சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நாளான இன்று (திங்கட்கிழமை) 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலி மற்றும் மறை உரையினை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புச்சாமி வழங்குகிறார். அதனை தொடர்ந்து 8.30 மணிக்கு மின் அலங்கார தேர் பவனி தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மூஞ்சிக்கல் திருஇருதய ஆலயத்தினை அடைகிறது.

விழாவின் இறுதி நாளான 15-ந் தேதி அன்னையின் விண்ணேற்பு மற்றும் விடுதலைப் பெருவிழா நடைபெறுகிறது. இதனையொட்டி திருப்பலியும் தேசிய கொடியேற்றமும் நடைபெறுகிறது. இதனை வட்டார அதிபர் பங்குத்தந்தை ஜெரோம் ஏரோனி மூஸ் நிகழ்த்துகிறார். அதனை தொடர்ந்து சப்பர பவனி, சிறப்பு திருப்பலிகள் நடைபெற்ற பின்னர் நற்கருணை ஆசிருடன் கொடியிறக்கம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தையர்கள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். விழாவினையொட்டி மதுரை, வத்தலக்குண்டு, திண்டுக்கல், தேனி, பழனி உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

SCROLL FOR NEXT