ஆன்மிகம்

பள்ளிகொண்ட மகாவிஷ்ணு

வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்தபடியாக ஹரிபோதினி ஏகாதசிக்கும் பக்தர்கள் சிறப்பு மரியாதை செலுத்துகின்றனர்.

நேபாள நாட்டில் உள்ள காத்மாண்டு நகரத்தின் வடக்கே, இமயமலை அடிவாரத்தில் அமைந்திருக்கிறது 'புத்தநில்கந்தா திருக்கோவில்'. மகாவிஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட இந்த ஆலயத்தை, கி.பி. 6-ம் நூற்றாண்டில் காத்மாண்டு பள்ளத்தாக்கின் ஆரம்ப கால அரசரான விஷ்ணு குப்தா என்பவர் கட்டமைத்துள்ளார்.

இங்கு பல தலைகளைக் கொண்ட ஆதிசேஷனின் படுக்கை மீது, மகா விஷ்ணு படுத்திருப்பது போன்ற தோற்றத்தில் 16 அடி நீள சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சிலை, பசால்ட் என்ற வகை பாறையில், ஒரே கல்லில் உருவாக்கப்பட்டதாக சொல்கிறார்கள். இந்தக் கல் சிற்பம் 42 அடி நீளம் கொண்டது. குளத்தில் நீர் நிரம்பி இருக்கும்போது, இந்த சிலையானது, நீரின் மீது மிதப்பது போன்ற தோற்றத்தை அளிக்கும்.

இந்தக் கோவிலில் நேபாளம் மட்டுமின்றி இந்தியாவில் பல பகுதிகளில் இருந்து ஏராளமானவர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த ஆலயத்தில் சயனகோலத்தில் அருளும் மகாவிஷ்ணு, துயில் கொள்ளும் தோரணையில் காட்சியளிக்கிறார். இங்கு ஒவ்வொரு ஆண்டும், 'ஹரிபோதினி' ஏகாதசியில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்தபடியாக ஹரிபோதினி ஏகாதசிக்கும் பக்தர்கள் சிறப்பு மரியாதை செலுத்துகின்றனர்.

இந்த ஏகாதசியானது, கார்த்திகை மாதத்தில் தொடக்கத்தில் வளர்பிறை ஏகாதசியாக வரும். இங்கே தண்ணீரில் மிதக்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த மகாவிஷ்ணு சிலை, வைகுண்டத்தில் திருப்பாற்கடலில் திருமால் பள்ளிகொண்டிருப்பதை போன்ற தோற்றத்தை கண்முன் நிறுத்துவதாக சொல்கிறார்கள்.