காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஸ் அம்மாள் ஆலய தேர்பவனி 
ஆன்மிகம்

காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஸ் அம்மாள் ஆலய தேர்பவனி

காட்டுமன்னார்கோவில் அருகே புனித ஆக்னேஸ் அம்மாள் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி பங்குதந்தை ஜெயராஜ் தலைமையில் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது.

மாலை மலர்

காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள இருதயபுரம் கிராமத்தில் புனித ஆக்னேஸ் அம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் தேர்பவனி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேர்பவனி விழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் காலை, மாலை வேளையில் கூட்டு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்து வந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி பங்குதந்தை ஜெயராஜ் தலைமையில் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடந்தது. பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித ஆக்னேஸ் அம்மாள் சொரூபம் வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தேர்பவனி நடைபெற்றது. இந்த பவனியானது கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்கள் வழியாகவும் சென்று, மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் இருதயபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர்.