தூய வியாகுல அன்னை ஆலயத்தில் கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம். 
ஆன்மிகம்

தூய வியாகுல அன்னை ஆலய விழா தொடங்கியது

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.

ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலையில் தூய வியாகுல அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனையொட்டி காலையில் திருப்பலி, சிலுவை பாதை, தொடர்ந்து மறைசாட்சி நவநாள் சிறப்பு திருப்பலி ஆகியவை நடைபெற்றது. மாலையில் கொடி நேர்ச்சை, தொடர்ந்து மேள, தாளம், பட்டாசு வெடிக்க கொடி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.

கோட்டார் மறைமாவட்ட முதன்மை பணியாளர் ஹிலாரியுஸ் தலைமையிலும், பிஷப் ரெமிஜியுஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் ஸ்டான்லி சகாய சீலன், தேவசகாயம் மவுண்ட் பங்குதந்தையர் ஸ்டீபன், ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் கொடியேற்றப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தேவசகாயம் மவுண்ட் பங்கு பேரவை துணை தலைவர் பயஸ்ராய், திரு தொண்டர் சகாயசுனில், பங்கு பேரவை செயலாளர் தேவசகாயம், பொருளாளர் ஞானசேகர், துணை செயலாளர் மேரி கலையரசி, வட்டார பங்கு பேரவை துணை தலைவர் ஜேக்கப் மனோகரன் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து திருப்பலி நடந்தது.

திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தையர், திருத்தொண்டர், பங்கு அருட்பணி பேரவையினர், அருட் சகோதரிகள், பங்கு மக்கள் செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT