ஆன்மிகம்

புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள்

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

புராணங்கள் மற்றும் இதிகாசங்களில் வரும் கதாபாத்திரங்களையும், சில அற்புதப் பொருட்களையும் பற்றி இந்தப் பகுதியில் சிறிய குறிப்புகளாக பார்த்து வருகிறோம். இந்த வாரமும் சில கதாபாத்திரப் படைப்புகள் உங்களுக்காக..

நகுலன்

பாண்டவர்களில் நான்காவதாக பிறந்தவன் நகுலன். பாண்டுவின் இரண்டாவது மனைவி மாத்ரிக்கு, அஸ்வினி குமாரர்களின் அம்சமாக பிறந்த இரட்டையர்களில் ஒருவன். இவன் வில் எய்தல் மற்றும் வாள் சண்டையில் சிறப்பு பெற்றவன். பாண்டவர்கள் 5 பேரில் மிகவும் அழகானவனாக நகுலன் கருதப்படுகிறான். இவன் வனவாசத்தின் இறுதி காலத்தில், விரத தேசத்தில் இருந்தான். அப்போது அந்த நாட்டு மன்னனின் குதிரைகளை மேற்பார்வையிடுபவனாக பணியாற்றினான். குதிரைகளோடு பேசும் திறமை படைத்தவனாக இருந்தான். மகாபாரத யுத்தத்தின் போது, கர்ணனின் மகன்களான சித்திரசேனன், சத்தியசேனன், சுஷேனன் ஆகியோரை கொன்றான். கர்ணனுடன் போரிட்டபோது, அவனுக்கு ஈடுகொடுத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தினான். இருந்தாலும் நகுலனின் தேரையும், படைகளையும் சிதறடித்தான் கர்ணன்.

பாண்டவர்கள்

அஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்த பாண்டுவிற்கு குந்தி, மாத்ரி என இரண்டு மனைவிகள். இவர்கள் இருவருக்கும் பல தேவர்களின் அம்சமாக ஐந்து பிள்ளைகள் பிறந்தனர். பாண்டுவின் மகன்கள் என்பதால் இவர்கள் 5 பேரும் ‘பாண்டவர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். பாண்டவர்களின் மூத்தவர் யுதிஷ்டிரர், அடுத்ததாக பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன். பாண்டவர்களுடன், கவுரவர்களான துரியோதனன் உள்ளிட்ட 100 சகோதரர்களுக்கும் பொறாமை உணர்வு ஏற்பட்டது. அதன் காரணமாகவே மகாபாரத யுத்தம் உருவானது. யுத்தத்தில் பாண்டவர்கள், கவுரவர்கள் இருவரின் தரப்பிலும் பல இழப்புகள் ஏற்பட்டன.