குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, காளிவேடம் அணியும் பக்தர்கள் துளசிமாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு சுவாமி வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுகின்றனர்.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம். 10-ம் திருநாளான அக்டோபர் 20-ந்தேதி நள்ளிரவு நடைபெறுகிறது.
தசரா திருவிழாவை முன்னிட்டு, நேர்த்திக்கடனுக்காக வேடம் அணியும் பக்தர்கள் பல்வேறு நாட்கள் விரதம் கடைபிடிப்பார்கள். விநாயகர், சிவன், பார்வதி, கிருஷ்ணர், முருகபெருமான், ராமர், லட்சுமணர், நாராயணர் போன்ற சுவாமி வேடங்களை அணியும் பக்தர்கள் 21 நாட்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.
காளிவேடம் அணியும் பக்தர்கள் 61 நாட்கள், 41 நாட்கள், 31 நாட்கள், 21 நாட்கள் என தங்களது சூழலுக்கு ஏற்றவாறு விரதம் மேற்கொள்வார்கள். எனினும் பெரும்பாலானவர்கள் 41 நாட்கள் விரதத்தையே கடைபிடிக்கின்றனர்.
அதன்படி, காளி வேடம் அணியும் பக்தர்கள் விரதத்தை தொடங்குவதற்காக நேற்று செவ்வாடை அணிந்து குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வந்தனர். இதையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடினர். அவர்கள் கடற்கரையில் துளசிமாலைகளை வாங்கி சென்று. கோவில் அர்ச்சகர் மூலம் அணிந்து கொண்டு விரதத்தை தொடங்கினர்.