ஆன்மிகம்

திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில்

தமிழகத்தில் அரவானுக்கு பல கோவில்கள் இருந்தாலும், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

சரி.. யார் இந்த அரவான்?

வில்வித்தையில் சிறந்தவனான அர்ச்சுனனுக்கும், நாகக் கன்னி ஒருத்திக்கும் பிறந்தவன் தான் அரவான். அவன் சாமுத்திரிகா லட்சணம் அனைத்தும் கொண்ட அழகன். குருச்சேத்திரப் போர் நடைபெறும் களத்தில், இந்த அரவானை பலிகொடுத்துதான் பாண்டவர்கள் வெற்றி பெற்றார்கள் என்கிறது புராணம்.

மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பலவிதமான யுக்திகளை, கிருஷ்ண பகவான் கையாண்டார். அதில் ஒன்றாகத்தான் பாண்டவர்களில் ஒருவனும், ஜோதிடத்தில் மேதையுமான சகாதேவனிடம் ‘பாண்டவர்கள் நிச்சயமாக வெற்றிபெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?’ என்று கிருஷ்ணன் கேட்டார்.

அப்போது ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து பார்த்த சகா தேவன், போர் தொடங்குவதற்கு உகந்த நாளை குறித்துக் கொடுத்ததுடன், சாமுத்திரிகா லட்சணம் கொண்ட ஒரு இளைஞனை களப்பலி கொடுத்தால் வெற்றி உறுதி என்றும் கூறினான்.

சகாதேவன் குறிப்பிட்ட அந்த லட்சணம் பொருந்தியவர்கள் மூன்று பேரே. அவர்கள் கிருஷ்ணர், அர்ச்சுனன், அரவான். அர்ச்சுனன் இல்லையேல் போர் இல்லை. கண்ணன் இல்லையேல் உலகமே இல்லை. அதனால் எஞ்சியிருக்கும் அரவானைப் போய் சந்தித்தார் கிருஷ்ணன்.

அவனிடம் பாண்டவர்களின் நிலையை சொன்னார். தான் களப்பலி ஆவதால், நீதி நிலைக்கும், தர்மம் வெல்லும், போரில் பாண்டவர்கள் வெல்வார்கள் என்பதால், கிருஷ்ணனின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டான் அரவான்.

அதே நேரத்தில் இரண்டு நிபந்தனைகளையும் விதித்தான். ‘கிருஷ்ணரே! நான் திருமணமாகாதவன், தாம்பத்யத்தை அறியாதவன். எனவே என்னை யாராவது ஒரு பெண் திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடன் ஓரிரவாவது நான் குடும்பம் நடத்த வேண்டும். அடுத்தது... நான் களப்பலி ஆனதும், வெட்டுப்பட்ட என் தலைக்குப் போர் முடியும் வரை, போரில் நடைபெறும் காட்சிகளைக் காணும் சக்தியைத் தர வேண்டும். இந்த இரண்டு நிபந்தனைகளுக்கும் ஒப்புக்கொண்டால், நான் நாளைக்கே களத்திற்கு வந்து பலியாகத் தயார்’ என்றான்.

இரண்டாவது நிபந்தனையை நிறைவேற்றுவதில் எந்த தடையும் இல்லை. ஆனால் போருக்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் நிலையில், அரவானுக்கு எப்படி திருமணம் நடத்துவது? அப்படியே திருமணம் செய்து வைத்தாலும் கூட, இவனின் நிலையை அறிந்த பெண் யார்தான் திருமணத்திற்கு ஒப்புக்கொள்வாள்.

ஆனால் கிருஷ்ணன் அதுபற்றி யோசிக்கவே இல்லை. உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தவர், அரவானைப் பார்த்து, ‘உன்னுடைய ஆசைகள் இரண்டும் நிறைவேறும். உன்னைத்தேடி இன்று இரவு ஒரு அழகிய பெண் வருவாள். நீ அவளை கந்தர்வ திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியோடு இரு’ என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கிவிட்டது. அழகிய பெண்ணுக்காக காத்திருந்தான் அரவான். அவன் எதிர்பார்த்தது போலவே.. கிருஷ்ணர் சொன்னது போலவே ஒரு அழகியப் பெண் அங்கு வந்து சேர்ந்தாள். அவளை ஆசையோடு நெருங்கிய அரவான், முழுமை அடையப்போகும் சந்திரனின் சாட்சியாக அவளை கந்தர்வ மணம் புரிந்துகொண்டு, அவளோடு களிப்புற்று இருந்தான்.

கிருஷ்ணர் தன்னுடைய மாய சக்தியால் ஒரு பெண்ணை உருவாக்கி அனுப்பினார் என்றும், அவரே பெண் உருவெடுத்து சென்றார் என்றும் இருவேறு கதைகள் கூறப்பட்டாலும், அரவானின் விருப்பம் நிறைவேறி அவன் மகிழ்ச்சியடைந்தான். மறுநாள் காலை தன் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நீராடி தூய ஆடை அணிந்து களப்பலிக்குச் சென்றான். முறைப்படி அரவானின் களப்பலி முடிந்தது. போர் ஆரம்பமாகி, 18 நாட்கள் நடைபெற்றது. அந்த போரை முழுவதும் அரவானின் தலை உயிர்ப்புடன் இருந்து கண்டுகளித்தது.

இந்த அரவானின் களப்பலியை நினைவூட்டும் விதமாக, ஆண்டுதோறும் சித்திரை மாத பவுர்ணமியை ஒட்டி விழுப்புரம் அருகில் உள்ள கூவாகம் கிராமத்தில் இருக்கும் கூத்தாண்டவர் ஆலயத்தில் சித்திரைப் பெருவிழா நடைபெறும். தமிழகத்தில் அரவானுக்கு பல கோவில்கள் இருந்தாலும், கூவாகம் கூத்தாண்டவர் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு, இந்தியாவில் உள்ள திருநங்கைகள் அனைவரும் இந்த ஆலயத்தில் வந்து குவிவார்கள்.

மகாபாரதப் போரில் களப்பலியான அரவானைத் தங்களின் கணவனாக நினைக்கும் திருநங்கைகள், அரவானை அழகிய பெண்ணாக மாறி மணந்தது கண்ணன்தான் என்றும், தாங்கள் கண்ணனின் வாரிசுகள் என்றும் நம்புகிறார்கள். இதனால் சித்திரைப் பெருவிழாவில் குவியும் திருநங்கைகளின் எண்ணிக்கை ஏராளம்.

பவுர்ணமிக்கு முதல் நாள் கூத்தாண்டவர் கோவில் முன்பு, திருநங்கைகள் அனைவரும் தங்களை மணப்பெண் போல் அலங்கரித்துக் கொண்டு நிற்பார்கள். அவர்களுக்கு அரவான் சார்பாக, கோவில் பூசாரி தாலியைக் கட்டுவார். திருமணமான மகிழ்ச்சியில் அன்று இரவு திருநங்கைகளின் ஆட்டம் பாட்டம் மகிழ்வுடன் நடைபெறும். மறுநாள் தேர்த் திருவிழா மற்றும் அரவான் களப்பலி போன்றவை நடை பெறும். அரவான் களப்பலியானதும், முதல் நாள் கட்டிய தாலியை அறுத்தெறிந்து விட்டு, வெள்ளைப் புடவை கட்டி, திருநங்கைகள் அனைவரும் ஒப்பாரிவைத்து சோகமாகக் காணப்படுவார்கள்.

இந்த ஆண்டுக்கான கூவாகம் கூத்தாண்டவர் கோவில் விழா கடந்த 17-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான அரவான் கண் திறத்தல் நிகழ்ச்சி மே 1-ந் தேதியும், அன்றைய தினமே அரவான் களப்பலி நிகழ்வும் நடைபெற உள்ளது.

அரவானின் ஆலயங்கள்

கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டம் முதல் கோயம்புத்தூர் வரை உள்ள பகுதிகளில் மட்டும் கூத்தாண்டவர் கோவில்கள் காணப்படுகின்றன. இவற்றுள் முப்பத்திரண்டு கோவில்கள் பிரபலமானவை, அதில் முதன்மையான இடத்தை கூவாகம் பெறுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூர் (நீலிக்கோணாம் பாளையம்), கஞ்சப்பள்ளி, குமாரமங்கலம், குறிச்சி, குட்டாம்பட்டி, துடியலூர்.