ரதயாத்திரையின் போது, பக்தர்களுக்கு மகாபுஷ்கரம் விழா குறித்த துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்ட போது எடுத்த படம். 
ஆன்மிகம்

காவிரி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ரத யாத்திரை

ஸ்ரீரங்கம், காவிரி மகாபுஷ்கரம் விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் ரதயாத்திரை நடைபெற்றது.

மாலை மலர்

காவிரி மகா புஷ்கரம் திருவிழா ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது அந்தந்த ராசிகளுக்கு உரிய நதிகளில் நடைபெறுவது ஆகும். அதன்படி காவிரியில் இந்த புஷ்கரம் 144 வருடங்களுக்கு ஒருமுறை வருவதால் அடுத்த மாதம் (செப்டம்பர்) 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை காவிரி மகாபுஷ்கரம் விழாவாக கொண்டாடப்படுகிறது.

காவிரி நதியின் ராசியான துலாம் ராசியில் இந்த மகா புஷ்கரம் வருவதால் காவிரி பாயும் எல்லா இடங்களிலும் அரசு உதவியுடன் இந்த புஷ்கரம் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் அம்மாமண்டபம் சாலை கோனார் சத்திரம் எதிரே உள்ள திறந்தவெளி மைதானத்தில் யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

காவிரி மகா புஷ்கரம் விழாவையொட்டி காவிரி புஷ்கரம் பிரம்ம யக்ஞ கமிட்டி சார்பில் நேற்று மாலை 5 மணியளவில் ரதயாத்திரை நடைபெற்றது. ஸ்ரீரங்கம் வடக்கு உத்திரவீதியில் உள்ள ஸ்ரீரெங்க நாராயண ஜீயர் மடம் முன் இருந்து புறப்பட்ட ரதயாத்திரையை ஸ்ரீரங்கம் ரெங்க நாதர் கோவில் ஸ்ரீரெங்க நாராயண ஜீயர் தொடங்கி வைத்தார்.

இந்த ரதயாத்திரை கிழக்கு உத்திரவீதி, தெற்கு உத்திரவீதி, மேற்கு உத்திரவீதி வழியாக வடக்கு உத்திரவீதியை வந்தடைந்தது.ரதயாத்திரையின் போது பக்தர்களிடம் காவிரி மகா புஷ்கரம் விழா குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்த ரதயாத்திரையில் காவிரி புஷ்கரம் பிரம்ம யக்ஞ கமிட்டியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.