108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
வைகாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் காலை முக்கிய உற்சவமான கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, இளம் பச்சை நிற பட்டு உடுத்தி மலர் மாலைகள் திருவாபரணங்கள் அணிவித்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளச் செய்தனர்.
பின்னர் மேளதாள, பேண்ட், வாத்தியங்கள், முழங்க, வேதப்பாராயண கோஷ்டியினர் பாடிவர,தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய வரதராஜ பெருமாள் பாதம் தங்கிகள் தூக்கிச் செல்ல கோபுர வாசலில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார் .
பின்னர் இரு குடைகளை கோவில் பட்டாச்சாரியார்கள் பிடித்துச் செல்ல வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்த வரதராஜ பெருமாளை வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டு சென்றனர்.
வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவத்தை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்ததால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.