கண் திருஷ்டி கணபதி 
ஆன்மிகம்

கண் திருஷ்டி கணபதி

கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டில் குறிப்பாக வடக்குத்திசை நோக்கி இருக்குமாறு மாட்டி வணங்கலாம். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம்.

மாலை மலர்

ஒருவரது கண் பார்வை சாதாரணமாக, இயல்பாக இருக்கும் பட்சத்தில் அதனால் எந்த கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால். அதே கண் பார்வை பொறாமை, வயிற்றெரிச்சல், தீய எண்ணம் என்ற உணர்வுகளை தாங்கி, அதனால் எழுகின்ற எண்ண அலைகளைக் குவித்து, கண்களின் மூலம் தீர்க்கமாகப் பார்க்கப்படும் போது, அது மிகவும் வலிமையாக பாய்ந்து மிக கெடுதலான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

அகத்திய மகாமுனிவர், இந்த கண் திருஷ்டி என்ற அசுரனை அழித்து சம்காரம் செய்து இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வவல்லமை பொருந்திய மகா சக்தியை தோற்றுவித்தார். அவர் தான் ”கண் திருஷ்டி கணபதி“. இந்த கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டில் குறிப்பாக வடக்குத்திசை நோக்கி இருக்குமாறு மாட்டி வணங்கலாம். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம்.

வீட்டின் முன் அறையில் மற்றவர்கள் கண் பார்வை படுமாறு வைத்தும் வணங்கலாம். வியாபாரஸ்தலம், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் வைத்து வழிபடலாம். கண் திருஷ்டி கண்பதியின் தோற்றம், போர்க்களம் சென்று எதிரிகளை வென்று திரும்பி வந்த போர்க்கோலத் தோற்றம். இந்த சிறப்பான ‘வடிவம்’கொண்ட ‘கண் திருஷ்டி கணபதி’யை ஒவ்வொரு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து வணங்கலாம்.