ஆன்மிகம்

காமிகா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்கள்

ஆவணி மாத தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி எனப்படும். இந்த நாளில் துளசியால் பெருமாளை பூஜை செய்வதால் ஸ்வர்ணத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும்.

அஸ்வமேத யாகம் செய்த பலன் காமிகா ஏகாதசியை பற்றி கேட்போருக்கு உண்டு. காமிகா ஏகாதசி விரதமிருந்தால் காசியில் கங்கையில் குளித்த பலனைக் காட்டிலும், நைமிஷாரண்ய காட்டில் குளித்ததை விடவும், புஷ்கரணியில் குளித்ததை விடவும் பலன் அதிகம். சாலக்ராமக் கற்கள் அதிகமாக கிடைக்கும் கெண்டகி நதியில் குளித்த பலன் மற்றும் கோதாவரி நதியில் திங்கட்கிழமை வரும் பௌர்ணமி அன்று குரு பகவான் சிம்ம ராசியில் சஞ்சாரிக்கும் போது குளிக்கும் பலனை விட அதிகமாக காமிகா ஏகாதசி விரத பலன் கிடைக்கும்.

இமய மலையில் கேதாரநாதரை தரிசித்த பலனை விட அதிகம். குருக்ஷேத்திரத்தில் சூரிய கிரகணம் அன்று குளித்த பலனை விட அதிகம். வேத சாஸ்திரங்களை படிப்பதை காட்டிலும் பலன் வாய்ந்தது. இந்த பூமியை அதன் காடுகள் சமுத்திரங்களோடு தானம் கொடுத்ததற்கு ஒப்பானது. ஒரு பசுவை அதன் கன்றோடு, அவை உண்ண தேவையான உணவோடு தானமாக கொடுப்பதற்கு சமம்.