ஆன்மிகம்

மாற்றம் பெறுவோம்

“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின. (2 கொரிந்தியர் 5:17)

மாலை மலர்

“ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புது சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்து போயின. எல்லாம் புதிதாயின. (2 கொரிந்தியர் 5:17)

பக்தியுள்ள தந்தை ஒருவர் மிகவும் தவறாக வாழ்ந்துகொண்டிருக்கும் தன்னுடைய மகனை எண்ணி மிகவும் வருந்தினார். எனவே பல போதகர்களை அழைத்துவந்து தன் மகனுக்கு புத்திமதி கூறசொல்வார். ஒரு முறை போதகர் ஒருவர் அவனுக்கு புத்திமதிகூற வந்தபோது அவனுக்கு மிகவும் எரிச்சல் வந்துவிட்டது. எல்லோரும் என்னிடத்தில் இருக்கும் குறைகளை யெல்லாம். சொல்லிவிட்டு செல்கின்றனர். ஆனால், என்னிடத்தில் இருக்கின்ற எல்லா குறைகளும் எனக்கு தெரிந்தவைதான். நீங்கள் என்னசொல்லப்போகிறீர்கள் என்று மகன் போதகரிடம் கேட்டான்.

அதற்கு அவர் எல்லோரும் நீ அறிந்து வைத்திருப்பதைதான் சொன்னார்கள். நானோ, நீ அறியாமலிருப்பதை சொல்கிறேன். இந்த குறைபாடுகள் யாவும் நீங்கி நீ ஒரு மிக நல்ல மனிதனாக மாறுவதற்கான வாய்ப்பை பெற்றிருக்கிறாய். அதனை நீ இன்னும் அறியவில்லையே என்றார். அந்த மகனுக்கு போதகர் சொன்ன அந்த வார்த்தை மிகவும் மனதை தொட்டது.

நம்முடைய தவறுகளை நாம், அறிந்திருக்கலாம். நம்முடைய குறைகளை நாம் புரிந்துவைத்திருக்கலாம். ஆனால், நம்முடைய தவறுகளை ஒத்துக்கொள்வது நேர்மையானது அல்ல. நாம் தவறுகளை உணர்ந்து அது மாறுவதற்கான வழிகளை தேடவேண்டும். அநேகர் பிரார்த்தனை மேற்கொள்ளும்போது இறைவனிடம் நாங்கள் வழிதவறிபோன ஆடுகள் என்றும் எங்களுக்கு சமாதானம் இல்லை என்றும் அறிக்கை செய்துவிட்டு மீண்டும் தங்களுடைய தவறுகளை தொடரவே செய்கின்றனர்.

அவர்கள் தங்களிடம் உள்ள குறைகளை அறிக்கையிட்டும் கடவுள் அவர்களுக்காக ஆயத்தமாக வைத்துள்ள நிறைவான வாழ்க்கையை குறித்த உணர்வோ, தேடலோ அவர்களிடம் இல்லை. அவர்கள் தங்கள் நிலைமையை பார்க்க அறிந்திருந்தும் கிறிஸ்துவுக்குள் தங்களுக்கு இருக்கும் உயர்ந்த நிலைமையை நம்பிக்கையோடு பார்த்து அனுபவிக்க முன்வரவில்லை.

தந்தையிடம் சொத்தில் பங்கை பிரித்து எடுத்து சென்ற மகன் ஒருவன் சொத்துக்களை தவறான வழியில் செலவிட்டு கடைசியில் உணவுக்காக பன்றிகள் சாப்பிடும் தவிடுகூட கிடைக்காத இழிவான நிலையை தாமதமாக உணர்ந்தான். ஆனால், அதை நினைத்து நொந்துகொண்டு தொடர்ந்து அவ்வாறே வாழ்ந்திருந்தால் எந்த நன்மையும் அவனுக்கு ஏற்பட்டிருக்காது.

அவன் ஒரு மாற்றத்தை விரும்பினான். மீண்டும் தந்தையை நோக்கி ஓடினான். எனவே, அவனுக்காக வைத்திருந்த உயர்ந்த திட்டம் மற்றும் உயர்ந்த அந்தஸ்தை அடைந்தான். ஆம் அதுபோல நாம் கடவுளால் மாற்றப்பட்டு சந்தோஷமும், சமாதானமும் உயர்ந்த தரிசனமும் உன்னத குணங்களும் உடைய உயர்ந்ததோர் வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பை பெற்றிருக்கின்றோம். அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. நம்மை பாவி என்று அறிக்கையிடுவதில் அல்ல. நம்மை கடவுளால் மாற்றப்பட்ட பரிசுத்தம் உடையவனாக பிறருக்கு காண்பிப்பதுதான் ஆன்மீகம்.

“தவறை செய்வது சாதாரணமானது.

அதனை உணர்த்தும்போது உணர மறுப்பதே பயங்கரமானது”.

-சாம்சன் பால்