சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, நேற்று காலை 10.30 மணிக்கு கோபால பாராயண வழிபாடு, ஸ்ரீராதா கிருஷ்ணனுக்கு அபிஷேகம் நடந்தது.
காலை 11 மணிக்கு குழந்தை கிருஷ்ணருக்கு இனிப்புகள் படைக்கப்பட்டு அபிஷேகம், பகல் 12 மணிக்கு மகிளா சபா சார்பில் பஜனை, மாலை 5 மணிக்கு குழந்தைகளின் பஜனை, இரவு 7 மணிக்கு அமரபாரதி குழுவினரின் பஜனை, 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 10 மணிக்கு ஆச்சாரியா பள்ளி மாணவ, மாணவிகளின் நாட்டிய நாடகம், இரவு 10.30 மணிக்கு குழந்தை கிருஷ்ணருக்கு மகாபிஷேகம், இரவு 12 மணிக்கு நள்ளிரவில் கிருஷ்ணரின் தெய்வீக தோற்றத்தை நினைவுகூரும் தரிசனம், ஆரத்தி மற்றும் ஊஞ்சல் சேவை நடந்தது.
கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதி இல்லாததால் வீடுகளில் இருந்தபடி இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் சுமித்ரா கிருஷ்ணதாஸ் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.
தொடர்ந்து இன்று(செவ்வாய்கிழமை) இஸ்கான் நிறுவனர் ஆச்சார்யாவின் 125-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.