காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி தரிசனம் மற்றொரு சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஒரு வரலாறும் இருக்கிறது.
அதாவது, கொங்கண தேசத்தில் சிருங்கி பேரர் என்பவருக்கு ஹேமன் மற்றும் சுக்லன் என்று 2 மகன்கள் இருந்தனர். இருவரும் கவுதம முனிவரிடம் வேதம் கற்று வந்தனர். இவர்களின் அன்றாட வேலை என்னவென்றால், முனிவர் பூஜைக்கு தேவையான நீரும், யாகம் செய்ய குச்சிகளும் கொண்டு வந்து தருவது ஆகும்.
ஒருமுறை அவர்கள் இருவரும் கொண்டு வந்த நீரில் 2 பல்லிகள் இருந்ததை முனிவர் கண்டார். கோபமடைந்த முனிவர் இருவரையும் பல்லிகளாக மாறும்படி சாபமிட்டார். சீடர்களும் தங்களது தவறினை உணர்ந்து மன்னிக்கும்படி வேண்டினர். முனிவரும் மனம் இறங்கி, ‘நீங்கள் இருவரும் அத்திகிரி மலையில் உள்ள வரதராஜரை நோக்கி தவம் செய்யுங்கள். அவர் உங்களை காப்பாற்றுவார்.
சாப விமோசனமும் கொடுப்பார்’ என்று கூறினார். சீடர்களும் அவ்வாறே செய்து சாப விமோசனம் பெற்றனர். அவர்கள் நினைவாக இந்த கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட 2 பல்லிகள் உள்ளன.