கோமாதா 
ஆன்மிகம்

கோமாதா.... குலமாதா...

வேதகாலம் தொடங்கி, இன்று வரை கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் பெருமையையும், பசுவைப் பராமரிக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தாத நூல்களோ சமயங்களோ கிடையாது.

மாலை மலர்

ஆன்மிக நோக்கில் மனிதனாகப் பிறப்பதற்கு ஓர் உயிர் எத்தனை புண்ணியம் செய்ய வேண்டுமோ, அதே அளவு புண்ணியம் பசுவாகப் பிறப்பதற்கும் செய்ய வேண்டும் என்று புராணங்கள் உரைக்கின்றன. பசு இருக்கும் இடத்தில் அன்னம், அழகு, ஐஸ்வர்யம், ஆரோக்கியம் அனைத்தும் வந்து சேர்ந்து விடும். சாணம் மெழுகிய நிலம், சாணிநீர் தெளித்த முற்றம், சாணப்பரிமணமான விபூதிப் புழக்கம், பால் கொதிக்கும் நறுமணம், தயிர் கடையும் மத்தோசை, தாக சாந்தி தரும் மோர் என்பன வீட்டிற்கு அனைத்து விதத்திலும் மகிழ்ச்சியைத் தரும்.

பசு நமக்குப் பொருட்செல்வத்தையும் அருட்செல்வத்தையும் ஒருசேர அளிக்க வல்லது என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதனை உணர்ந்தே நமது முன்னோர்கள் ஒவ்வொருவரும் பசுவினைத் தங்கள் வீடுகளில் வளர்த்து வந்தனர். இது தவிர பசுக்கள் கூடுகின்ற இடங்களில் பசுக்களின் தாகம் தீர்ப்பதற்காக தண்ணீர் தொட்டியை அமைத்தனர். அத்தொட்டிகளில் எந்நேரமும் நீர் நிரம்பியிருக்கும்படியும் செய்தார்கள்.

கூடவே பசுக்களின் உடலில் ஈ, கொசுக்கள், உண்ணிகள் அமர்ந்து அவற்றிற்கு தீங்கு செய்யும் போது, பசுக்கள் தங்கள் உடலைச் சொறிந்து கொள்வதற்காக ஆவுரிஞ்சுக்கற்ககளையும் ஆங்காங்கே நட்டு வைத்தனர். ஒரு பசு குடும்பம் காக்கும். ஒன்பது பசு குலத்தைக் காக்கும் என்பது நம் முன்னோர்கள் சொன்ன மொழியாகும்.

பசுவிற்கு ஒரு பிடி புல் கொடுப்பதே தர்மம் என்றால் அந்த பசுவை வளர்த்துப் பைணி காப்பது எந்த அளவிற்கு புண்ணியத்தை கொடுக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். குழந்தை இல்லாதவர்கள் பசு வளர்த்து சேவை செய்தால் உடனடியாக குழந்தை பாக்கியம் உண்டாகும். தீராத நோய் நொடிகளுக்கு பசுஞ்சாணத் திருநீறு மருந்தாகும். குடும்பப் பீடை உள்ள இடங்களில் புண்ணிய அர்ச்சனை செய்து பசுமாட்டை உள்ளே வரவழைத்து பூஜை செய்தால் தோஷங்கள் விலகும்.

இதனால்தான் இந்து மதம் வேறு எதற்கும் அளிக்காத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் அளித்து வந்திருக்கிறது. பசுவை, வெறுமனே மாடு என்று விஷயம் தெரிந்தவர்கள் அழைக்க மாட்டார்கள். அதற்கு பதில் பசுவை, பசுத்தாய், கோமாதா என்றே அழைப்பார்கள். மிகச்சிறிய ஆலம் விதை பிரம்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போல ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒரு வடிவாகும்.

எல்லோருக்கும் தங்கள் வீட்டிலேயே பசு வழிபாடு செய்ய இயலாது. எனவேதான் ஒவ்வொரு ஆலயத்திலும் பசுத்தொழுவம் அமைத்து அன்றாடம் கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆலயத்திலும் கோ சாலை (பசு மடம்) இருந்தால் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.

தினமும் பசு மடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை. அதோடு முக்கிய நாட்களில் அல்லது எல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம். பசு மாடுகளை சந்தனம், குங்குமம் போன்றவற்றால் அலங் கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை. வீட்டில் கோமாதாவின் படத்தை வைத்து வழிபாடு செய்வதும் இந்த வகையிலேயே அடங்கும்.