மனித வாழ்வின் மிக முக்கிய அங்கமான திருமணத்தை பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், சுய விருப்ப விவாகம் என இரண்டாக வகைப்படுத்ததலாம். ஜோதிட ரீதியாக ஒருவரின் ஜாதகத்தை வைத்து பெற்றோரின் விருப்ப திருமணமா? ஜாதகரின் விருப்ப திருமணமா என்பதை எளிதாக கூற முடியும்.
ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் மண வாழ்க்கையை நிர்ணயிக்கும் இடம். ஐந்தாமிடம் காதலைக் குறிக்குமிடம். ஒன்பதாமிடம் மதம் மற்றும் இனத்தைப் பற்றிக் கூறுமிடம்.இந்த இடங்களும் இந்த இடத்தின் அதிபதிகளும் பலம் பெறுவதும் நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம்.
இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை ஆசை விருப்பம் காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும். ஒருவரின் ஜாதகத்தில் 2,5,7,11-ம் பாவகங்கள் சம்பந்தம் பெற்றால் நிச்சயம் காதல் திருமணம் நடைபெறும். ஏழாம் அதிபதியுடன் சுக்கிரன் செவ்வாய் சனி இணைந்திருந்தாலோ அல்லது ஏழாம் அதிபதியை சுக்கிரன் செவ்வாய் சனி பார்த்தாலோ காதல் திருமணம் நடைபெறும்.
ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் பாவம் அதன் அதிபதி, குரு பலம் குறைந்தால் கலப்பு திருமணம் நடைபெறும். ராகு கேது கிரகங்கள் பிற மதத்தினரை குறிக்கும். இந்த இரண்டு கிரகங்களும் ஐந்து, ஏழு அதிபதிகளுடன் தொடர்பு கொண்டிருப்பது இணைவது சுக்கிரனுடன் ராகு கேது இணைவது வேறு மதத்தினருடன் திருமணம் செய்யும் நிலை ஏற்படும்.