திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று மாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலையில் தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்தது.
இதனால் திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளித்தது. அதிக அளவில் பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் மலை அடிவாரத்தில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
நேரடி இலவச தரிசனத்தில் காத்திருப்பு அறைகள் அனைத்தும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. அந்த அறைகளை தாண்டி பக்தர்கள் சீலா தோரணம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதி கோவிலில் நேற்று 72,703 பேர் சாமி தரிசனம் செய்தனர். 37,581 பக்தர்கள் முடிககாணிக்கை செலுத்தினர். ரூ.4.02கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. 4.34 லட்சம் லட்டுகள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.