ஆன்மிகம்

ஈசனால் கண்பார்வை பெற்ற தண்டியடிகள்

பிறக்க முக்தி தரும் திருவாரூரில் அவதரித்தவர் தண்டியடிகள் நாயனார். இவரது வாழ்வில் சிவபெருமாள் நிகழ்த்திய திருவிளையாடலை அறிந்து கொள்ளலாம்.

மாலை மலர்

பிறக்க முக்தி தரும் திருவாரூரில் அவதரித்தவர் தண்டியடிகள் நாயனார். இவர் பிறவியிலேயே கண்பார்வை இல்லாதவர். தன் அகக் கண்ணினால் ஈசனை நினைத்தபடி, அவனது நாமத்தை உச்சரித்துக் கொண்டு வாழ்ந்து வந்தார். தினமும் சிவாலயத்தை வலம் வந்து பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்தபடி இருந்தார்.

கோவில் மேற்புறம் உள்ள திருக்குளத்தின் அருகில் சமணர்கள் பலர் இருந்தனர். அவர்கள் திருக்குளத்தை கண்டு கொள்ளாததால், அது பழுதுபட்டுக் கிடந்தது. இதனை அறிந்த தண்டியடிகள், அந்த திருக்குளத்தை தூர்வாரும் திருப்பணியைச் செய்ய எண்ணினார். குளத்தின் நடுவில் ஒரு கம்பும், குளக்கரையின் மேட்டில் ஒரு கம்பும் நட்டு, இரு கம்புகளிலும் ஒரு கயிறு கட்டினார். அந்தக் கயிற்றை தடவியபடியே குளத்தில் இறங்கி மண்ணை ஒரு கூடையில் எடுத்து, கரை மேட்டில் கொட்டும் பணியைச் செய்தார். அவ்வாறு பணி செய்யும்போது, பஞ்சாட்சரத்தை அவரது உதடுகள் உச்சரித்துக் கொண்டே இருந்தது.

பல காலமாக தண்டியடிகள் செய்து வந்த இந்தத் திருத்தொண்டின் காரணமாக திருக்குளத்தில் தண்ணீர் பெருகத் தொடங்கியது. இதனைக் கண்டு பொறாமையுற்ற சிலர், அங்கு வந்து அந்தத் திருப்பணியை நிறுத்தும்படி தண்டியடிகளிடம் வலியுறுத்தினர். ஆனால் தண்டியடிகள் நாயனாரோ, “இது திருநீற்றையே சாந்தமாக எண்ணிப் பூசும் சிவபெருமானுக்கு உரிய திருப்பணி. இதன் பெருமையை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்றார்.

இதனால் மேலும் கோபமற்ற அவர்கள், “நாங்கள் கூறும் வார்த்தைகளை நீ கேட்க மாட்டாயா?. உனக்கு கண்தான் இல்லையென்றால், காதையும் இழந்துவிட்டாயா?” என்று ஏளனம் செய்தனர்.

அதற்கு தண்டியடிகள், “நான் ஈசனின் திருவடியைத் தவிர ஒன்றையும் காணவில்லை. மந்தமான மதியும், காணாக் கண்களும், கேளாச் செவியும் உங்களுக்குத்தான் உள்ளன. சிவபுண்ணியத்தின் திறனை நீங்கள் அறியவில்லை. சிவபெருமானின் திருவருளால், உலகமெல்லாம் அறியும்படி என் கண் காணவும், உங்கள் கண்கள் குருடாகவும் பெற்றால் என்ன செய்வீர்கள்?” என்றார்.

இந்தக் கேள்வியால் அதிர்வுற்ற எதிராளர்கள், “அப்படியொரு நிகழ்வு நடந்தால், நாங்கள் இந்த ஊரிலேயே இருக்க மாட்டோம்” என்று சூளுரைத்தனர். அத்துடன் நில்லாமல், தண்டியடிகள் கரத்தில் இருந்த மண்வெட்டியையும், கூடையையும் பறித்து, குழித்தறிகளையும் பிடுங்கி எறிந்தனர். இதனால் மனம் நொந்து போன தண்டியடிகள் நாயனார், திருக்கோவிலின் முன்பாக நின்று, “ஐயனே! உனக்கு நான் செய்த திருப்பணியையும், உன்னையும் அவமானம் செய்தவர்களால், அடியேன் வருந்துகிறேன். எல்லாம் அறிந்த நீயே, இந்த இடரை நீக்கி அருள்புரிதல் வேண்டும்” என்று ஈசனிடம் வேண்டி தன் இருப்பிடம் சென்று கண்ணுறங்கினார்.

அன்றிரவு நாயனாரின் கனவில் தோன்றிய ஈசன், “அன்பனே! நீ உன் மனதில் உள்ள கவலையை விடுக! நாளைக்கு உன் கண்கள் ஒளிபெறும். சிவதொண்டு எதிர்ப்பாளர்கள் கண்ணொளி இழப்பார்கள் அஞ்சாதே!” என்று அருளிச்செய்து மறைந்தார். பின்னர் சோழமன்னனின் கனவிலும் தோன்றிய சிவபெருமான், “மன்னனே! தண்டி என்னும் எமது அன்பன் எமக்கு குளம் தோண்டும் பணியை செய்துவந்தான். அவனது பணிக்கு சிலர் இடர் செய்தார்கள். நீ அவனிடம் சென்று அவன் கருத்தை முடிப்பாய்” என்றார்.

சோழ மன்னன் கண்விழித்து எழுந்தான். இறைவனின் கருணையை எண்ணி உள்ளம் உருகினான். அதிகாலையிலேயே தண்டியடிகளிடம் வந்து, அவரைப் பணிந்து, தான் கண்ட கனவு பற்றி எடுத்துரைத்தான். என்ன நடந்தது என்பதையும் தண்டியடிகளிடம் கேட்டு விவரம் அறிந்தான். திருக்குளம் தோண்டத் தொடங்கியது முதல், எதிர்ப்பாளர்களால் தனக்கு நேர்ந்த இடர் வரை அனைத்தையும் மன்னனிடம் கூறினார் தண்டியடிகள்.

அரசன், திருக்குளத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை அழைத்து நடந்த சம்பவம் பற்றி விசாரித்தான். மேலும் ஈசனை வேண்டி தண்டியடிகள் கண் பெற்று விட்டால், தாங்கள் அனைவரும் இந்த ஊரை விட்டு சென்று விடவேண்டும் என்றும் உத்தரவிட்டான். அதற்கு எதிர்ப்பாளர்களும் இசைந்தனர். தண்டியடிகள் திருக்குளத்தை நோக்கிச் செல்ல, மன்னனும் மற்றவர்களும் பின்னே சென்றனர். அனைவரும் திருக்குளக்கரையை அடைந்தார்கள்.

மன்னன் தண்டியடிகளைப் பார்த்து, “நீ கண் பெறுமாறு காட்டும்” என்றான்.

தண்டியடிகள், “சிவபெருமானே பரம்பொருள். அவருடைய அடியவனாக நான் இருப்பது உண்மையானால், உலகத்தார் முன்னே என் கண்கள் ஒளிபெறட்டும். ஈசன் எதிர்ப்பாளர்கள் கண்கள் ஒளி விலகட்டும்” என்று கூறி ஐந்தெழுத்தை ஓதி திருக்குளத்தில் மூழ்கினார். அவர் எழுந்தபோது அவரது கண்கள் ஒளிவீசிக் கொண்டிருந்தன. அனைவரும் இறைவனின் கருணையை எண்ணி ஆனந்தித்தனர். அதே வேளையில் எதிர்ப்பாளர்களது கண்கள் ஒளி இழந்து போயின. அதனால் அவர்கள் வருத்தம் கொண்டு கலங்கி நின்றார்கள்.

அவர்களை நோக்கி, “நீங்கள் ஒப்புக்கொண்டபடி இந்த ஊரை விட்டு செல்லுங்கள்” என்று மன்னன் உத்தரவிட்டான். கண்களை இழந்த எதிர்ப்பாளர்கள் அனைவரும் தங்கள் நிலையை எண்ணி வருந்தியபடி அங்கிருந்து புறப்பட்டார்கள். தொடர்ந்து மன்னன் திருக்குளத்தையும், அதன் கரையையும் புதுப்பித்தான். தண்டியடிகள் மலரடியை பணிந்து வணங்கினார்.

திருவருளையே சிந்தித்து, ஐந்தெழுத்தை இடையறாது நினைத்து, திருப்பணியின் குறையை நிறைவு செய்ததன் காரணமாக முடிவில் முக்தியை எய்தினார் தண்டியடிகள் நாயனார்.