சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா வருகிற 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதையொட்டி தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் வெவ்வேறு வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் உட்பிரகார விதிஉலா நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியானஆனி திருமஞ்சன விழா வருகிற 28-ந்தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் கீழவீதியில் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவில் பொது தீட்சிதர்கள் கூறுகையில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன விழா நடைபெறும்.
அதன்படி இந்தாண்டும் விழா நடைபெற உள்ளது. வழக்கமாக இந்த விழாவில் உள்ளூர் மட்டும் இன்றி வெளிமாநிலம், வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தற்போது ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், இந்தாண்டு நடைபெறும் விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. மேலும் மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் வழக்கமாக நடைபெறும் பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் கிடையாது. அதற்கு பதில் கோவில் உட்பிரகாரத்தை பஞ்சமூர்த்திகள் சுற்றிவரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டாண்டு காலமாக கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடைபெற்று வருகிறது. இந்த நடைமுறையில் மாற்றம் இருக்கக்கூடாது என்பதற்காகவும், கொரோனா தொற்று பரவக்கூடாது என்பதற்காக பக்தர்கள் இன்றி இந்தாண்டு ஆனி திருமஞ்சன விழா நடத்தப்பட உள்ளது என்றனர்.