தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார் சன்னதிக்கும், பெரியநாயகி அம்மன் சன்னதிக்கும் முன்பு நந்திபெருமான் சன்னதி உள்ளது. இங்குள்ள நந்திசிலை மிகப்பெரியது ஆகும். இந்த நந்திக்கு ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் பால், தயிர், மஞ்சள், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்வது வழக்கம்.
இந்த அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் கொடுப்பார்கள். இது தவிர ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று நந்திக்கு காய்கனிகளால் அலங்காரம் செய்யப்படும்.
இந்த நிலையில் தஞ்சை பெரியகோவிலில் குடமுழுக்கு நடைபெற்றதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 2-ந் தேதி பாலாலயம் நடந்தது. மேலும் இங்குள்ள அனைத்து தெய்வங்களின் சக்தியும் வேதாசிகம முறைப்படி பெருவுடையார் சன்னதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டன.
இதனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். மற்ற சன்னதிகள் அனைத்தும் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து பெரியகோவில் நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து பிரதோஷ விழா, சோமவாரத்தையொட்டி நடைபெறும் சங்காபிஷேகம், மாட்டுப்பொங்கல் அன்று நந்திக்கு நடைபெறும் காய்கனி அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறவில்லை. கடைசியாக நந்திக்கு கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி பிரதோஷம் நடந்தது. இந்த நிலையில் குடமுழுக்கு விழா நடைபெற்ற மறுதினமான நேற்று பிரதோஷம் ஆகும். இதையடுத்து நந்திக்கு அபிஷேகம் நடந்தது. நந்திக்கு அஷ்டபந்தன மருந்து சாத்தப்பட்டு இருப்பதால் பால் அபிஷேகம் மற்றும் எண்ணெய்காப்பு தவிர மற்ற அபிஷேகம் எதுவும் நடைபெறவில்லை.
நேற்று நடந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருவுடையாரை தரிசனம் செய்தனர்.
பிரதோஷ வழிபாட்டையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.