வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் எழுந்தருளினர். 
ஆன்மிகம்

ஆவணி மூலத்திருவிழா: வளையல் விற்ற லீலை வரலாறு

தங்கள் தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட பத்தினிகளுக்கு, இறைவனே நேரில் வந்து உங்கள் கைகளிலே வளையல் சூட்டுவார்.

மாலை மலர்

வளையல் விற்ற லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:-

முன்பொரு காலத்தில் தாருகாவனத்து ரிஷிகள் தங்கள் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் என்று செருக்குற்றிருந்தனர். அச்செருக்கை அடக்க எண்ணிய சொக்கநாதர் பிச்சாடனார் கோலத்தில் தாருகாவனத்திற்கு சென்றார்.

அங்கு பிச்சையிட வந்த அத்தனை ரிஷிபத்தினிகளும் அவரது அழகிலே மயங்கி நின்றனர். கோபமுற்ற ரிஷிகள் அந்த பெண்களை மதுரையிலே சாதாரண வணிகர் குல பெண்களாக பிறக்கும்படி சபித்தனர். தங்கள் தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட பத்தினிகளுக்கு, இறைவனே நேரில் வந்து உங்கள் கைகளிலே வளையல் சூட்டுவார். அப்போது உங்கள் சாபம் தீர்ந்து எங்களை வந்தடைவீர்கள் என்று கூறினார்கள்.

அவ்வாறு ரிஷிபத்தினிகளும் பெண்களாக மதுரையிலே பிறந்து வளர்ந்தனர். அவர்களின் சாபத்தை போக்க இறைவனும் வளையல் வியாபாரியாக தெருவில் வந்து, அவர்களின் கைகளை தொட்டு வளையல் அணிவித்தார். உடனே அவர்களின் சாபம் நீங்கி சிவலோகம் சென்றதாக புராண வரலாறு கூறுகிறது.