அயோத்தியை ஆண்ட ராமபிரானின் முன்னோர்களில் ஒருவரான சகரன் என்ற மன்னன். ஒரு சமயம் அஸ்வமேத யாகம் நடத்தினார். அந்த யாகத்தை தடுக்கும் பொருட்டு சில விரோதிகள், யாகக் குதிரையை திருடிச் சென்று, கபில முனிவரின் ஆசிரமத்தில் கட்டி வைத்தனர். குதிரையை தேடி வந்த சகரனின் 60 ஆயிரம் மகன்களும், கபிலரின் ஆசிரமத்தில் குதிரை நிற்பதை பார்த்தனர். இதனால், கபிலர்தான் குதிரையை திருடி இருக்க வேண்டும் என்று நினைத்து கபில முனிவரை அவமானப்படுத்தினர்.
இதனால் கோபம் அடைந்த கபில முனிவர், 60 ஆயிரம் பேரையும் எரித்து சாம்பலாக்கினார். சகரனின் வம்சாவளியினர் பலரும் தங்கள் முன்னோர்களான 60 ஆயிரம் பேரும் நற்கதி அடைய வேண்டும் என்று பல யாகங்கள் நடத்தினர். ஆனால் அவர்களது ஆத்மாவானது நற்கதி அடையாமல் அலைந்துக் கொண்டிருந்தது.
சகரனின் வம்சத்தில் வந்தவன் தான் பகீரதன். இவன் தனது முன்னோர்களின் கதையை கேட்டறிந்து, அவர்களுக்கு முக்தி தர நினைத்தான். வானுலகத்தில் இருக்கும் கங்கையால் தான், தன் முன்னோர்கள் முக்தி அடைவார்கள் என்பதை அறிந்த பகீரதன், கங்கையை நோக்கி பல ஆண்டுகள் தவம் இருந்தான். பகீரதனின் தவத்தில் மகிழ்ந்த கங்கா தேவி, பூமிக்கு வர சம்மதித்தாள்.
ஆனால் கங்கை பூமிக்கு வந்தால் கங்கையின் வேகத்தை பூமி தாங்காது என்பதால் பகீரதன் சிவபெருமானை வேண்டினான். சிவபெருமான், கங்கையை தன் ஜடாமுடியில் தாங்கி, கங்கை பூமியில் வேகம் குறைந்து செல்ல அனுமதித்தார். இதனால் பகீரதனின் முன்னோர்கள் மோட்சம் பெற்றனர். இவ்வாறு கங்கை பூமிக்கு வந்த நாள் ஒரு அட்சய திருதியை தினம் ஆகும்.