கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகப் பெருவிழா மகாமக குளத்தில் நடைபெறுவதால் மகாமக நகரம் என்றும், பாஸ்கர ஷேத்திரம் என்றும் கும்பகோணம் அழைக்கப்படுகிறது. இந்நகரில் மகாமகம் தொடர்புடையதாக 12 சிவன் கோவில் களும், 5 வைணவ கோவில் களும் உள்ளன.
பல்வேறு சிறப்பு வாய்ந்த கும்பகோணம் நகரில் உலகிலேயே முதன்முதலாக தோன்றியதாக மங்களாம்பிகை ஆதி கும்பேசுவரர் திருக்கோவில் திகழ்கிறது.
இக்கோவிலை முதன்மையாக கொண்டே ஆண்டு தோறும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று நடைபெறும் மாசிமக திருவிழாவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமக பெரு விழாவும் நடைபெறுகிறது.
இந்த ஆண்டு மாசிமகப்பெருவிழா கடந்த 20-ந் தேதி பத்து நாள் உற்சவமாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய விழாவான 8-ம் நாள் தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. முதலில் அதிகாலை 5.30 மணிக்கு விநாயகர் தேரோட்டமும், அதனை தொடர்ந்து காலை 7.30 மணிக்கு சாமி, அம்பாள், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து தேரோட்டமும் நடைபெற்றது.
தேரோட்டத்தினை கும்பகோணம் உதவி கலெக்டர் பிரதீப்குமார், தாசில்தார் வெங்கடாஜலம், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்(பொறுப்பு) சிவராம்குமார், கோவில் செயல் அலுவலர் கவிதா ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளிலும் வலம் வந்து காலை 11 மணிக்கு நிலையை வந்தடைந்தது.