ஆன்மிக களஞ்சியம்

திருவண்ணாமலை-ஆச்சரியமூட்டும் தகவல்கள்-20

திருவண்ணாமலை கோவிலின் மொத்த பரப்பளவு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுரடி.ஒரு காலத்தில் வெண்கலத்தால் ஆன கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது.

1. திருவண்ணாமலை கோவிலின் மொத்த பரப்பளவு 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுரடி.

2. திருவண்ணாமலையில் அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் கிரிவலம் செல்வதே மிகச்சிறப்பான கிரிவலமாகும்.

3. திருவண்ணாமலை ஆலய சுற்றுச்சுவர் 30 அடி உயரம் கொண்டது.

4. தல விருட்சமான மகிழ மரத்தின் அருகில் நின்று பார்த்தால் ஆலயத்தின் 9 கோபுரங்களையும் ஒரே சமயத்தில் பார்க்க முடியும்.

5. மூன்றாம் பிரகாரத்தில் உள்ள சிறு மண்டபம் அருகில் அமர்ந்து தியானம் செய்தால் எவ்வளவு பதற்றமான மனமும் அமைதி பெறும்.

6. அண்ணாமலையாருக்கு திருப்பணி செய்தவர்களில் விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் முதன்மையானவராக கருதப்படுகிறார்.

7. அண்ணாமலையார் ஜோதியாக இருந்ததை முழுமையாக உணர்ந்து திருமூலர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார்.

8. திருவண்ணாமலை ஆலய கருவறை வாசல் இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சுமார் 10 அடி உயரத்துடன் உள்ளனர்.

9. திருவண்ணாமலை பள்ளியறை சுவாமி, மேரு சக்கரம் என்றழைக்கப்படுகிறார்.

10. இத்தலத்து அர்த்தநாரீஸ்வரர் ஆண்டுக்கு ஒரு தடவை வெளியில் வருவதுபோல 63 நாயன்மார்களும் ஆண்டுக்கு ஒரு தடவை வீதியுலா வருகிறார்கள்.

11. திருக்கார்த்திகை தினத்தன்று மலைவாழ் மக்கள் திணை மாவில் விளக்கேற்றி அண்ணாமலையாரை வழிபடுகிறார்கள்.

12. உலகின் மிகப்பழமையான விழாவாக திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா கருதப்படுகிறது.

13. மலைமேல் தீபம் ஏற்றக்கூடிய பாக்கியம் பெற்றவர்கள் பர்வத ராஜ குலத்தவர்கள் ஆவார்கள்.

இவர்களை நாட்டார்கள், செம்படவர்கள் என்றும் அழைக்கின்றனர்.

14. ஒரு காலத்தில் வெண்கலத்தால் ஆன கொப்பரையில் தீபம் ஏற்றப்பட்டது.

சக ஆண்டு 1668ல் பிரதானி வெங்கடபதி ஐயன் என்பவர், நாலரை பாரம் எடையில்

இந்த வெண்கலக் கொப்பரையை செய்து கொடுத்தார்.

பின்பு தீபம் ஏற்ற இரும்புக் கொப்பரையே பயன்படுத்தப்பட்டது.

இதன் விட்டம் 96 செ.மீ. கிட்டத்தட்ட மூன்றடி. உயரம் 145 செ.மீ.

அடிபாகத்தின் சுற்றளவு 221 செ.மீ. விரிந்த மேற்பரப்பின் சுற்றளவு 280 செ.மீட்டர் ஆகும்.

பிறகு 1991ம் ஆண்டு இக்கொப்பரை மாற்றப்பட்டு புதிய கொப்பரை வைக்கப்பட்டது.

தற்போது 92 கிலோ செப்பு 110 கிலோ இரும்புச் சட்டங்களைக் கொண்டு புதுக்கொப்பரை உருவாக்கப்பட்டுள்ளது.

15. திருவண்ணாமலையில் சிவபெருமானே மலைவடிவில் காட்சியளிப்பதால் ஆலயத்தைச் சுற்றி வருவதைவிட

மலையை சுற்றி வலம் வருவதுதான் மிகச்சிறந்த வழிபாடாக கருதப்படுகிறது.

16. இறைவனாகிய திரு அண்ணாமலையை ஒருமுறை சுற்றி வந்தால் ஒரு கோடி புண்ணியம் கிடைக்கும் என்பது சித்தர்கள் வாக்கு.

17. திருவண்ணாமலையில் ஒருநாள் உபவாசம் இருந்தால் அது பிற தலங்களில் நூறு நாள் உபவாசம் இருந்ததற்கு சமமாம்.

18. கிரிவலம் வந்த பின்னர், அண்ணாமலையார் ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கன்னி மூலையில் எழுந்தருளியுள்ள

துர்வாச முனிவரை வணங்கி பின்னர் அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மாளையும் தரிசித்தல் வேண்டும்.

19. திருவண்ணாமலை கிரிவலத்தின் தனி சிறப்பு என்னவென்றால், இங்கு வருடத்தின் எல்லா நாட்களிலும்

பகலோ, இரவோ, அந்தியோ, சந்தியோ, வெயிலோ, மழையோ, எந்த நேரமும் யாராவது ஒருவர் கிரிவலம் வந்தவாறு இருப்பார்கள்.

20. திருவண்ணாமலையை 'மந்திர மலை' என்றும் கூறுவார்கள்.

சிவபெருமானின் மந்திர அட்சரங்களான 'நமசிவாய' என்ற எழுத்தினை நினைவுகூறும் முகமாக இம்மலையானது ஒன்று முதல் ஐந்து சிகரங்களை உடையதாக காட்சி தருகின்றது.