ஆன்மிக களஞ்சியம்

சொல்லிவைத்தாற் போல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் அதிசயம்

இந்த நிகழ்வை விளக்கும் வைபவம் இன்றும் திருக்கொளம்பூதூர் தலத்தில் நடைபெறுகிறது. இதற்காக தீபாவளியன்று இரவு திருஞான சம்பந்தர் சிலையைப் படகில் வைத்து கொண்டு செல்வர்.

திருஞானசம்பந்தர் ஒரு தீபாவளி தினத்தன்று ஒரே நாளில் ஐந்து சிவாலயங்களை தரிசிக்க அடியார்களுடன் புறப்பட்டார்.

திருக்கருகாவூர், அவனிவநல்லூர், அரித்துவார மங்கலம், ஆலங்குடி, திருக்கொளம்பூதூர் ஆகிய ஐந்து தலங்களையும் ஐந்து கால பூஜையில் தரிசிப்பது இதன் நோக்கம்.

முதல் நான்கு தலங்களையும் தரிசித்து இறுதியாக அர்த்தசாம பூஜையில் திருக்கொளம்பூதூர் ஈசனை தரிசிக்க சம்பந்தர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது முள்ளியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

படகை செலுத்த முடியாத நிலை. சம்பந்தர் பதிகம் பாடியபடி படகைச் செலுத்தச் சொன்னார்.

ஈசனின் அருளால் ஒருவாறு அக்கரையை அடைந்தனர்.

என்றாலும் ஆலயம் சென்று இறைவனை தரிசிக்கும் போது, அர்த்தசாம பூஜை நேரம் கடந்து அதிகாலை ஆகி விட்டது. எனினும் சம்பந்தருக்காக அர்த்தசாம பூஜையை அதிகாலைப் பூஜையாகச் செய்தனர்.

இந்த நிகழ்வை விளக்கும் வைபவம் இன்றும் திருக்கொளம்பூதூர் தலத்தில் நடைபெறுகிறது.

இதற்காக தீபாவளியன்று இரவு திருஞான சம்பந்தர் சிலையைப் படகில் வைத்து கொண்டு செல்வர்.

அக்கரை அடைந்தும் ஈசன் எதிர்கொண்டு அழைப்பார். பிறகு இருவரும் ஆலயம் வந்து சேர்ந்ததும் பூஜைகள் நடக்கும்.

சொல்லி வைத்தது போல அன்றைய தினம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கும்.

தீபாவளிக்கு அடுத்த நாள் மட்டுமே இப்படி காலம் தள்ளி நடக்கும் இந்த பூஜையைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.