ஆன்மிக களஞ்சியம்

திருக்காளத்திப் புராணம்

காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன.வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது.

Lavanya

திருக்காளத்தி என்னும் ஊரில் குடிகொண்டுள்ள காளத்திநாதரைப் போற்றும் புராணங்கள் இரண்டு உள்ளன. ஒன்று வீரை ஆனந்தக் கூத்தர் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் திருக்காளத்திப் புராணம் என்னும் பெயரில் இயற்றியது. மற்றொன்று சிவப்பிரகாசரும் அவரது தம்பியும் சேர்ந்து 17 ஆம் நூற்றாண்டில் சீகாளத்தி புராணம் என்னும் பெயரில் இயற்றியது

இது பாயிரமும் 33 அத்தியாயங்களும் கொண்ட பெரிய நூல். இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களில் சில:

தேவாரம் பாடிய மூவர், திருவாதவூர் அடிகள், நூலாசிரியரின் குரு சத்திய ஞானி, திருப்பணி செய்த யாதவ வேந்தன், வடநூலைத் தனக்கு மொழிபெயர்த்து உதவிய சங்கரநாராயணன் என்னும் வாரைவாழ் புராணிகர் முதலானோருக்குப் பாயிரப் பகுதியில் வணக்கம் சொல்லப்பட்டுள்ளது.

சித்திரைச் சித்திரை, வைகாசி விசாகம், ஆனி மூலம், ஆடி உத்திரம், ஆவணி ஓணம், புரட்டாசி புரட்டை, ஐப்பசி அச்சுவதி, கார்த்திகைக் கார்த்திகை, மார்கழித் திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்கள் காளத்திநாதரை வழிபடுவதற்கு உரிய நன்னாள்கள் எனக் கூறப்பட்டுள்ளன.

1 போற்றிப் பாடல்

நீயே வினைமுதல் நீயே கரணமும்

நீயே கரணம், நீயே காரியம்

நீயே தருபவன், நீயே சான்று உரு

நீயே இவையுள் நீங்கினை சயசய

2 நல்லொழுக்கம் கூறும் பாடல்

ஓதனத்துக்கு உரியது ஒருபொருள்

யாது உண்டு என்னதை இத்துணை நாளைக்கும்

போதும் ஈது என்று உவந்து பொறுத்துத்

தீது இல் தானியம் ஓம்புக சீர் பெற.