சிவபக்தரான திருமாளிகை தேவர் மீது படையெடுத்து வந்த நரசிங்க மன்னனுடன் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்காக அம்பிகை திருவாவடுதுறை கோவில் மதில் மீது இருந்த நந்திகள் அனைத்தையும் ஒரே நந்தியாக்கி அனுப்பியதால் இன்றளவும் இத்திருக்கோவில் மதில் மீது நந்திகள் கிடையாது.
சிவபெருமானே சகல தோஷங்களும் நிவாரணமாக இருப்பதால் இத்திருக்கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனிச் சந்நதி கிடையாது.
திருஞானசம்பந்தர் தமது தந்தையின் வேள்விக்காக சிவபெருமானிடம் ஆயிரம் பொற்காசுகள் பெற்ற திருத்தலம்.
முப்பத்து முக்கோடி தேவர்களும் படர் அரச மரமாக இருக்க அம்மரத்தின் கீழ் சிவபெருமான் திருநடனம் புரிந்த திருத்தலம்.
தமிழகத்திலேயே உயரமான விஸ்வரூப நந்திதான் இங்கிருப்பவர்.
இவரது உயரம் பதினான்கு அடி ஒன்பது அங்குலம் ஆகும். (தஞ்சாவூரில் அமைந்துள்ள பெரிய கோவில் ஒரே கல் நந்தியின் உயரம் பன்னிரண்டு அடி).
தர்மதேவதையே இந்த நந்தியெம் பெருமானாக உள்ளார் என்பது ஐதீகம்
சிவனும் மகாவிஷ்ணுவும் பார்வதியை நடுவராக வைத்து சொக்கட்டான் ஆடிக்கொண்டிருந்த போது ஆட்டத்தில் காய் உருட்டியதில் இடர் வர பார்வதியிடம் கேட்கிறார் சிவன்.
பார்வதி மகாவிஷ்ணுவிற்கு சாதகமான பதிலை கூறியதால் சிவபெருமான் பார்வதியை பசுவாக பூமியில் பிறக்கும் படி சாபம் இடுகிறார்.
இப்படி பசுவாக பிறந்த பார்வதி பூவுலகில் பல இடங்களில் இறைவனை பூஜித்தாள்.
இத்தலத்தில் தம்மை வழிபட்டு வர சாபம் நீங்கப்பெறும் என்றார் சிவன்.
அதன்படி அம்பாள் பசுவின் வடிவில் இங்கு வந்து, சிவனை வேண்டி தவமிருந்தாள்.
சிவன் அவளுக்கு காட்சி தந்து, தன்னுடன் அணைத்துக்கொண்டு, விமோசனம் கொடுத்தார்.
"கோ"வாகிய பசுவிற்கு விமோசனம் தந்தவர் என்பதால் கோமுக்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார்.