அரைச்சக்கரவடிவில் ஊரைக்காக்கும் அரணாக மலை அமைந்திருந்ததால் 'சக்கரபுரி' என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் "உடும்புமலை' என்றும் அழைக்கப்பட்ட இவ்வூர், காலப்போக்கில் உடுமலைப்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.
உடுமலைப்பேட்டை மாரியம்மன் பக்தர்களின் மனக்குறைகளை தீர்க்கும் மாங்கல்ய மாரியம்மனாக சுயம்பு மூர்த்தியாக, அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் வருடந்தோறும் மார்கழி திருவாதிரையில், 108 தம்பதியர்களை வைத்து 'மாங்கல்ய பூஜை' நடத்தப்படுகிறது. இப்பூஜையில், அம்மனுக்கு மாங்கல்யம் சாத்தி விசேஷ ஹோமங்கள், பூஜைகள் நடத்தி, பெண்களுக்கு தாலிக்கயிறு வழங்கப்படுகிறது.
பூஜை செய்த தாலியை பெண்கள் அணிந்து கொள்வதால், அவர்கள் வாழ்வில் பிரச்சினைகள் இன்றி, சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. இதனால் இந்த அம்மனுக்கு மாங்கல்ய மாரியம்மன் என்ற பெயரும் உண்டு.