திண்டுக்கல் நகருக்கு இப்பெயர் வருவதற்கு காரணமே இந்நகரின் மேற்குப்பகுதியில் உள்ள சிறப்பு மிக்க மலைக்கோட்டை தான். இந்த மலைக்கோட்டை பார்ப்பதற்கு ‘திண்டு’ போன்று காட்சியளிப்பதால் இந்நகரை ‘திண்டுக்கல்’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.
புராண காலத்தில் பத்மகிரி, திண்டீச்சுரம், நெல்லிவனம் என்ற திருநாமங்களும் உண்டு. சுமார் 1200 அடி நீளமும், 900 அடி உயரமும் கொண்டது.
விஜயநகர மன்னர் அச்சுத தேவராயர் கி.பி.1553-ம் ஆண்டு திண்டுக்கல் மலைக் கோட்டையின் உச்சியில் இருந்த ஆலயத்தை புதுப்பித்தார். கி.பி.1605-ம் ஆண்டு மதுரையை ஆண்டு வந்த முத்துகிருஷ்ணப்ப நாயக்கரால் மலையில் கோட்டை கட்டப்பட்டதாக வரலாறு. பின் ராணி மங்கம்மாள் காலத்தில் மலை மீது உள்ள அபிராமி அம்மனை தரிசிக்க மக்கள் ஏறிச்செல்ல வசதியாக 600 படிகளை செதுக்கி வைத்தார்.
மலைக்கோட்டைக்கு தென்கிழக்குப்பகுதியில் பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் அழகான கோவிலும், ராணுவங்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள பாசறைகளும், அந்நாளைய பீரங்கி அமைப்பும், வற்றாத தெப்பமும் சிறப்பாக அமைந்துள்ளன. மலையின் கீழே கோட்டைக் குளமும், வடக்கே அய்யன் குளமும், தெற்கே அகத்தியர் தெப்பமும் சிறப்பாக அமைந்துள்ளன.
இவை தூர்ந்து போன அகழியின் அடையாளச்சின்னமாக திகழ்கின்றன. இந்த மலைக்கோட்டையில் இருந்து கொண்டு (1788-1790) திப்பு சுல்தான் ஆட்சி நடத்தி வந்தார். இந்த புகழ்பெற்ற மலைக் கோட்டையின் கீழே உள்ள கோட்டை குளத்திற்கு கிழக்குப்பகுதியில் இருந்த கவாத்து மைதானத்தில் (பேரேடு மைதானம்) திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினரால் ஒரு சிறு பீடமும், அதன்பின் அம்மன் மூலஸ்தான விக்ரகமும் ஸ்தாபிக்கப்பட்டது. அதுவே அவர்களுக்கு காவல் தெய்வமாகவும் இருந்து வந்துள்ளது. அதுதான் தற்போது புகழ்பெற்ற “கோட்டை மாரியம்மன் திருக்கோவில்” ஆகும்.