ஆன்மிக களஞ்சியம்

குருவே சர்வம்!

சீர்திருத்தம் பலவற்றை சிறப்புடனே செய்தவராம்...

சீர்பெருமை பல பெற்ற சீர்மிகு ராமானுஜராம்...

(சீர்திருத்தம்)

வைணவராய்ப் பிறந்தாலும் வையகமே போற்றி நிற்கும்

வரதராஜன் தந்த வரம் ராமானுஜர் அவதாரம்!

குலத்தாழ்ச்சி இல்லாமல், குலப்பெருமை பேசாமல்,

குலகுருவாய் வந்திட்டவர், குலம் செழிக்க வாதிட்டவர்!

(சீர்திருத்தம்)

ஆழ்வார்கள் அருளிச் செய்த அழகு தமிழ்ப் பாசுரங்கள்

வடமொழியின் வேதத்திற்கு இணையெனவே வாதிட்டவர்!

திராவிடரின் வேதமென்றே திவ்ய பிரபந்தப் பாசுரத்தை

ஓதும்படி செய்திடவே இவ்வுலகில் தோன்றிட்டவர்!

(சீர்திருத்தம்)

திருக்கோவில் உள்ளேதான் நுழைந்திடவே முடியாத

தெருக்கோடி மக்களுக்கும் திருக்கரத்தை நீட்டியவர்!

தீண்டாமை எனச் சொல்லும் தீவினையை மாற்றிடவே

திருப்பெரும்புதூர் ஈன்றெடுத்த அவதார திருச்செல்வர்!

(சீர்திருத்தம்)!

-நெமிலி ஸ்ரீபாபாஜி பாலா