மாமரக்காடு நடுவே பிலத்துவாரம்.
சுற்றிலும் கொழுந்து விட்டெரியும் பஞ்சாக்னி.
அதன் நடுவே காமாட்சி.
அன்னையின் எழில்மிகு நெற்றியில் திரிபுண்டரமான பிறைநிலவாய் திருநீறு.
கார்மேகம் வியக்கின்ற கார்குழல் அவிழ்ந்து முதுகிலும், தோள்களிலும் கருநுரை வெள்ளமாய்ப் பரவிக்கிடக்கிறது.
வலக்கரம் உயர்ந்து, சிரத்தின் உச்சியில் ருத்திராட்ச மாலையை விரல்களில் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
இடக்கரம் மார்பு ஊடாக மடிந்து, விரல்களில் சின்முத்திரையுடன் விளங்குகிறது.
இடக்கால் பெருவிரல் ஊன்ற பஞ்சாக்னியின் வெஞ்சுடர் முனையில் நிற்கிறது.
வலக்கால் முன்புறமாக மேல் நோக்கி மடங்கியிருக்கிறது.
கண்மலர்கள் குவிந்துள்ளன. திருவாய்மலர் பஞ்சாட்சரத் திருப்பெயரை உரைத்துக் கொண்டிருக்கிறது. மனமோ யோக தியானத்தில் தவழ்கிறது.
இதுவே அன்னையின் தவக்கோலம்.