மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் வருடத்தின் அனைத்து மாதங்களும் திருவிழாக்களும், உற்சவங்களும் காணும் கோவில் ஆகும். நவராத்திரி, சிவராத்திரி மட்டுமல்ல சிவ பெருமான் தன்னுடைய 63 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம் என்பதால், ஒவ்வொரு திருவிளையாடலும் வெகு சிறப்பாக கொண்டாடப் படுவது வழக்கம். வருடம் முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றாலும் மிகவும் பிரசித்தி பெற்றது மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவமும் தான்.
மீனாட்சி அம்மன் தாய் உள்ளம் கொண்டவள். இங்கு யார் எதை கேட்டு வணங்கினாலும் அதை அருளுவதோடு சகல ஐஸ்வர்யங்களையும் வழங்க கூடியவர். திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு வேண்டியவற்றை அளிப்பவர். மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும் மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு அல்லது சுபகாரியங்கள் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கோவிலுக்கு வந்து மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மனநிம்மதி கிடைக்கும்.
சுவாமி பிரகாரத்தில் ஓம் என்னும் நாதம் மட்டுமே நம் காதுகளுக்கு கேட்கும் அளவுக்கு மிக அமைதியாக இருக்கும். மன அமைதி, நிம்மதி வேண்டுவோர்கள் கோவில் பிரகாரத்தில் அமைதியான இடத்தில் தியானம் செய்வது மிகவும் சிறந்தது.
சுவாமிக்கு பால், எண்ணை, சந்தனம், இளநீர், பன்னீர் போன்ற அபிஷேகங்கள் செய்யலாம். தவம் செய்தல், விரதம் இருத்தல், தியானத்தில் ஈடுபடுதல், வேள்வி புரிதல், தானதர்மங்கள் அளித்தல் போன்ற பல்வேறு நிலையில் சுவாமிக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். அம்பாளை பொருத்தவரை பட்டு புடவை சாத்தி அபிஷேக ஆராதனைகள் செய்து தங்கள் வேண்டுதல்களை பக்தர்கள் பூர்த்தி செய்கின்றனர். சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்தும் யாகம் செய்தும் வழிபடலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியும் நேர்த்திக்கடன் செலுத்தப்படுகிறது.