அழகர்கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா தேரோட்டம் நாளை நடக்கிறது.
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆடி பெருந்திருவிழா. இந்த திருவிழா கடந்த 21-ந்தேதி அன்று காலையில் மங்கள இசையுடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று இரவு அன்ன வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை (புதன்கிழமை) காலையில் தேரோட்டம் நடைபெறும். காலை 7.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் திருத்தேர் வடம் பிடிக்கப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், நாளை மாலையில் ஆடிப்பவுர்ணமியையொட்டி அழகர்கோவில் 18-ம் படி கருப்பணசுவாமி சன்னதியின் திருநிலைக்கதவுகள் திறக்கப்பட்டு சந்தனம் சாத்துப்படியும், சிறப்பு வழிபாடும் நடக்கிறது. ஆண்டில் ஒருநாள் மட்டும் இவ்வாறு கதவுகள் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுவது சிறப்பாகும்.