திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை தொடங்கியது முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. பெருமளவில் பக்தர்கள் தங்களது வாகனங்களில் தரிசனத்திற்கு வருவதால் அலிபிரி சோதனை சாவடியில் வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கின்றன.
நேற்று காலை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் அனைத்து அறைகளும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் பக்தர்கள் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் வரை தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தனர்.
திருப்பதியில் நேற்று 74,569 பேர் தரிசனம் செய்தனர். 46,292 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.80 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேற்று ஒரே நாளில் 4.15 லட்சம் லட்டுக்கள் விற்பனையானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் உணவு, குடிநீர், பால், டி, காபி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் பாதிக்கப்படுவதால் அவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்காக நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.