முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவாக தயாரிக்கப்பட்ட ரூ.100 மதிப்பிலான நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
மறைந்த தலைவர் கலைஞர் பெயரில், 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது. இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கியது.
தொடர்ந்து, 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.
இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 18ம் தேதி மாலை கருணாநிதி நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார். விழாவுக்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாணயத்தை பெற்றுக் கொண்டார்.
அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.பி.க்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்களும் விழாவில் பங்கேற்றனர். தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் அக்கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.