செய்திகள்

2-வது ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தானுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 154 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. #AFGvsZIM #Afghanistan #Zimbabwe

மாலை மலர்

ஷார்ஜா:

ஆப்கானிஸ்தானுடனான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 154 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான இரண்டு டி-20 போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதலில் நடந்த டி-20 தொடரில் இரண்டு போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான் வென்று தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் 154 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை ஆப்கானிஸ்தான் வீழ்த்தியது.

இந்நிலையில், ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது.

டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மிர் மற்றும் மசகட்சா ஆகியோர் களமிறங்கினர். மிர் 9 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து பிரெண்டன் டெய்லர் இறங்கினார். இந்த ஜோடி 65 ரன்கள் சேர்த்த நிலையில் மிர் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து இறங்கிய கிரெய்க் எர்வின் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அவர் 10 ரன்களில் அவுட்டானார். அதன்பின் களமிறங்கிய சிக்கந்தர் ராசாவும், டெய்லரும் பொறுப்பாக விளையாடினர். டெய்லர் சிறப்பாக ஆடி சதமடித்தார். டெய்லர் 121 பந்துகளில் 8 சிக்சர், 5 பவுண்டரியுடன் 125 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 274 ஆக இருந்தது.

அவரை தொடர்ந்து அதிரடியாக ஆடிய சிக்கந்தர் ராசா 74 பந்துகளில் 4 சிக்சர், 9 பவுண்டரியுடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில், ஜிம்பாப்வே அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் எடுத்திருந்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ரஷீத் கான் 2 விக்கெட்டும், முஜிப் சட்ரான், கல்பாடின் நயிப் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியில் ரஹ்மத் ஷா 43 ரன்னும், மொகமது நபி 31 ரன்னும், தவ்லத் சட்ரன் 47 ரன்னுடனும் ஓரளவு ஆடினர். மற்றவர்கள் ஜிம்பாப்வே அணியினரின் பந்துவீச்சில் சிக்கி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.

இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 30.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு சுருண்டது. இதனால் ஜிம்பாப்வே அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணி சார்பில் கிரீமர் 4 விக்கெட்டும், சடாரா 3 விக்கெட்டும், முசாரபானி 2 விக்கெட்டும், பிரியன் விடோரி ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

ஏற்கனவே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை ஆப்கானிஸ்தான் அணி 154 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.