கெம்சாகர்நாயக் 
செய்திகள்

எனது காதலியிடம் பேசியதால் வாலிபரை கொன்றேன்- கைதான நபர் வாக்குமூலம்

பல்லடம் அருகே எனது காதலியிடம் பேசியதால் தலையில் கல்லை போட்டு வாலிபரை கொன்றேன் என்று கைதான நபர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மாலை மலர்

பல்லடம்:

ஒடிசா மாநிலம் பகா டாவை சேர்ந்தவர் கமால் தார்சாகு (25). இவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் தனது நண்பர்களுடன் தங்கி அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் கமால்தார்சாகு அந்த பகுதியில் உள்ள வாழை தோட்டம் ஒன்றில் பிணமாக மீட்கப்பட்டார். தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

அப்போது வாலிபரின் தலையில் பலத்த காயம் இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக் கலாம் என்ற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அவருடன் தங்கி இருந்த நண்பர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

அப்போது கமால்தார்சாகுவுடன் ஒரே அறையில் தங்கி இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கெம்சாகர்நாயக் (30) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது கமால்தார் சாகுவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

போலீசாரிடம் அவர் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- 

நானும், கமால்தார் சாகுவும் நண்பர்கள். ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தோம். அப்போது அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணை நான் 6 மாதமாக காதலித்து வந்தேன். நாங்கள் இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்தோம்.

இதை அறிந்து கொண்ட கமால்தார்சாகு எனது செல்போனில் இருந்த என் காதலியின் நம்பரை எடுத்து அவருடன் பேசி வந்தார். இதுபற்றி எனக்கு தெரியவந்தது. இதுகுறித்து கமால்தார்சாகுவிடன் நான் கேட்டேன். அப்போது அவர் நான் அப்படி தான் பேசுவேன் என்றார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கமால்தார்சாகு என்னை தாக்கினார். இதனால் கோபம் அடைந்த நான் கமால்தார்சாகுவை பழிவாங்க காத்திருந்தேன். அதன்படி சம்பவத்தன்று இரவு தூங்கி கொண்டிருந்த கமால்தார்சாகுவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன். பின்னர் உடலை தூக்கி சென்று அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் போட்டு விட்டு எதுவும் நடக்காதது போல் இருந்து கொண்டேன். ஆனால் போலீசாரின் தீவிர விசாரணையில் நான் சிக்கி கொண்டேன்.

இவ்வாறு அவர் கூறி னார்.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.