செய்திகள்

முதுகுளத்தூர் அருகே வாலிபர் மர்ம மரணம்

முதுகுளத்தூர் அருகே மாயமான வாலிபர் கண்மாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

முதுகுளத்தூர்

முதுகுளத்தூர் அருகே உள்ள கீழக்கன்னு சேரியைச் சேர்ந்தவர் உடையார். இவரது மகன் பாலமுருகன் (வயது 22). இவரை கடந்த 3 நாட்களாக காணவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் பாலமுருகனை தேடினர். பலன் இல்லை. எனவே கீழத்தூவல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பாலமுருகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அவர் கீழக்கரை சேரியில் உள்ள கண்மாயில் அழுகிய நிலையில் பிணமாக கிடப்பது தெரியவந்தது. தகவல் தெரிந்ததும் இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச்சென்று விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முதுகுளத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனைக்குப் பின்னர் தான் பாலமுருகன் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.