செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே வாலிபர் மர்ம மரணம்

ஆண்டிப்பட்டி அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே தர்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகன் செல்வேந்திரன் (வயது 35). இவர் சம்பவத்தன்று மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். போதையில் இருந்த செல்வேந்திரன் திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

பாண்டி மற்றும் அக்கம் பக்கத்தினர் செல்வேந்திரனை சோதித்து பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிய வந்தது. இது குறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து செல்வேந்திரன் உடலை கைப்பற்றி தேனி அரசு ஆஸ்பத்திரியில் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே செல்வேந்திரன் குடிபோதையில் இறந்தாரா? அல்லது யாரும் அடித்து கொன்றார்களா? என்பது தெரியவரும். போலீசார் இது குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews